Click here to make Tamil Catholicweb your default homepage

புனித அல்போன்சா
  முதல் இந்திய பெண் புனிதர் St. Alphonsa

கத்தோலிக்கத் திருச்சபை
  ஒரு மேலோட்டம் Catholism

திருவிவிலியம்
  கதைகளும், கவிதைகளும் Bible Stories


ஜெபமாலை வரலாறு
  History of the Rosary

தமிழ் தொலைக்காட்சி
  Tamil Catholic TV

ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பாராக
  May God Bless You!
  ??????? ???????? ????

கிறிஸ்துவும் விவேகானந்தரும்
  Jesus and Vivekananader

கிறிஸ்மஸ் மரம்
  Christmas Tree

Passion of the Christ
  Full movie

Rosary Prayer
  ??????? ????????

Search our Site
Search our Site
Search for...



Contact Us!
Contact us by using our convenient online form, or you may visit our staff directory.

தமிழ் கத்தோலிக்கன்.


Tamil Catholic ????? ???????????? at Down Street, London, Westminster SW1 UK - கதைகளும், கவிதைகளும் Bible Stories

கதைகளும், கவிதைகளும்
Bible Stories


நன்றி: சகோதரர் சேவியர்,
இவருடைய படைப்புக்களை படிக்க விரும்பினால் www.xavi.wordpress.com

கி.மு : மோசேயின் கானானை நோக்கிய பயணம்



இஸ்ரயேல் என்று கடவுளால் பெயரிடப்பட்ட யாக்கோபின் வழிமரபினர் எகிப்திற்குக் குடியேறினார்கள். அங்கு வாழ்ந்து வந்த அவர்கள் எகிப்து அரசர்களினால் அடிமைகளாக்கப் பட்டார்கள். மோசே என்பவரால் அவர்கள் எகிப்தியரின் நானூறு ஆண்டைய அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டு, கடவுள் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்திருந்த கானான் நாட்டை நோக்கி பயணித்தார்கள்.

வழியில் சீனாய் மலையிலிருந்து கடவுளின் பத்துக்கட்டளைகளையும், மற்றும் பல்வேறு ஒழுக்கம் சார்ந்த கட்டளைகளையும் பெற்றபின் மீண்டும் அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அவர்கள் கானானை அடைய நாற்பது ஆண்டுகள் ஆயின. அதுவரைக்கும் அவர்களுக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான, சோகமான பயண அனுபவங்கள் ஏராளம் ஏராளம்.

கடவுள் கொடுத்த பத்துக் கட்டளைகள் அடங்கிய கல்வெட்டை மோசே ஒரு பேழையில் வைத்து மூடினார். அது உடன்படிக்கைப் பேழை என்று அழைக்கப்பட்டது. அந்தப் பேழை இருக்குமிடமெல்லாம் கடவுளின் பிரசன்னம் அவர்களோடு இருந்தது. அவர்கள் போகும் வழியில் அவர்கள் மேலே ஒரு பெரிய நிழல் மேகமானது போய்க் கொண்டே இருந்தது. அந்த பெரிய நிழல்மேகம் எங்கெல்லாம் நின்றதோ, அங்கெல்லாம் இஸ்ரயேல் மக்கள் கூடாரம் அமைத்துத் தங்கினார்கள். மேகம் மீண்டும் பயணப்படும் வரை கூடாரங்களிலேயே தங்கினர். இவ்வாறு அவர்களுடைய பயணம் நடந்து கொண்டிருந்தது.

இஸ்ரயேல் மக்கள் பன்னிரண்டு குழுக்களாக இருந்தார்கள். மோசே இஸ்ரயேல் மக்களில் போருக்குத் தகுதியுடைய மக்கள் அனைவரையும் கணக்கெடுக்க கடவுளால் அறிவுறுத்தப் பட்டார். அதன்படி மோசேவும், அவரோடிருந்த ஆரோன் என்பவரும் ஒவ்வொரு குழுவிலிருந்தும் ஒவ்வொருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் குலத்தில் இருபது வயதுக்கு மேற்பட்ட, போருக்குத் தகுதியான அனைவரையும் கணக்கெடுத்தார்கள். அவர்கள் மொத்தம் ஆறு இலட்சத்து மூவாயிரத்து ஐநூற்று ஐம்பது பேர் இருந்தார்கள். கானான் நாட்டைக் கைப்பற்ற வேண்டுமென்றால் நிறைய யுத்தம் தேவைப்படும் என்பதை மோசே தெரிந்திருந்தார்.

போருக்குரிய மக்களைக் கணக்கெடுத்தபின் மோசே ஒவ்வொரு குலத்திலிருந்தும் ஒவ்வொருவரை அழைத்து அவர்களை நோக்கி,

‘நீங்கள் கானான் நாட்டுக்குச் சென்று நாடு எப்படி இருக்கிறது என்று பாருங்கள். நாட்டு மக்கள் எப்படியிருக்கிறார்கள் ? வலிமையானவர்களா ? வலிமையற்றவர்களா ? அங்கு வளங்கள் அதிகம் இருக்கிறதா ? நாட்டில் ஏராளம் செல்வம் இருக்கிறதா ? மக்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன ? அவர்கள் கோட்டைகள் கட்டியிருக்கிறார்களா ? இவற்றையெல்லாம் அறிந்து வாருங்கள்’ என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

அவர்களில் யோசுவா, காலேப் என்னும் இரண்டு பேரும் இருந்தார்கள். உளவாளிகள் அனைவரும் கானான் நாட்டிற்குள் சென்று நாற்பது நாட்கள் கானான் நாட்டைச் சுற்றிப் பார்த்தார்கள். கானான் நாடு செல்வச் செழிப்பானதாய் இருந்தது. ஏராளமான கனி வகைகள் அங்கே விளைந்திருந்தன. அங்குள்ள திராட்சைக் குலைகள் ஒருவர் தூக்க இயலாத அளவுக்குப் பெரிதாக இருந்தன. நோட்டமிடும் பணி முடிந்ததும், உளவாளிகளில் இருவர் அங்கிருந்த ஒரு பெரிய திராட்சைக் குலையை ஒரு மரக்கொம்பில் கட்டித் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.

யோசுவாவும், காலேப்பும் மோசேயிடமும், ஆரோனிடமும் வந்து ‘ கடவுள் உண்மையிலேயே நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். கானான் நாடு மிகவும் வளமானதாக இருக்கிறது. அங்கு பாலும், தேனும் ஓடுகிறது. அங்கே இல்லாத செல்வங்களே இல்லை. எல்லாவிதமான பழவகைகளும், தாவரங்களும் நன்றாக செழித்து வளர்கின்றன. ஆனால் அங்கே மக்கள் நம்மை விட வலிமையானவர்களாக இருக்கிறார்கள்’ என்றார்கள். மோசேயும், ஆரோனும் இதைக் கேட்டதும் மிகவும் மகிழ்ந்தார்கள்.

ஆனால் யோசேப்பையும், காலேப்பையும் தவிர மற்ற அனைவரும் இஸ்ரயேல் மக்களிடம் வந்து இல்லாததும் பொல்லாததும் சொன்னார்கள்.

‘ஐயோ.. கானான் நாடு நன்றாகவே இல்லை… ‘

‘அங்குள்ள மக்கள் இராட்சஸர்களைப் போல இருக்கிறார்கள், அவர்கள் முன்னிலையில் நாம் வெறும் வெட்டுக் கிளிகளைப்போல இருக்கிறோம்’

‘அங்கே போனால் நாம் அழிவது உறுதி. கடவுள் நம்மை கொல்வதற்காகத் தான் இங்கே அனுப்பி வைத்திருக்கிறார்’

அவர்கள் சொல்லச் சொல்ல மக்கள் மிரண்டு போன விழிகளோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய வர்ணனைகளில் பயந்து போன மக்கள் கூட்டம் கூட்டமாக முணுமுணுக்கத் துவங்கினார்கள்.

‘நாம் எகிப்தில் இருந்தபோது அடிமைகளாக இருந்தோம், ஆனாலும் இத்தனைக் கஷ்டம் இல்லை…’

‘எகிப்தில் இருந்தபோது உயிரோடு இருந்தோமே… இப்போது மடியப் போகிறோம் அல்லவா ?’

‘எல்லா விதத்திலும் எகிப்தில் அடிமைகளாய் இருப்பது இதைவிட உயர்ந்தது தான்’

‘நாம் ஒன்று செய்வோம். நாம் மோசேயை விட்டுவிட்டு வேறொரு தலைவரை ஏற்படுத்தி எகிப்திற்கே திரும்பிப் போவோம்’ மக்கள் அனைவரும் முடிவெடுத்தனர்.

இதையறிந்த யோசுவாமும், கலேபும் அதிர்ச்சியடைந்தார்கள்.
‘நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்பதை அறிந்து தான் பேசுகிறீர்களா ? நமது அடிமை நிலையை மாற்றிய கடவுளை நம்பாமல் மீண்டும் அடிமை நிலைக்கே போகப் போகிறீர்களா ? உங்களுக்கென்ன புத்தி பேதலித்து விட்டதா ?’

‘எங்களுக்கு உயிர்மேல் ஆசையிருக்கிறது. நாங்கள் சாகவேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா ?’

‘கடவுளை நம்பினால் நீங்கள் அழிய மாட்டீர்கள். கடவுளை நம்பவில்லையேல் எங்கு சென்றாலும் அழிவு உங்களை விட்டு அகலாது’

‘இங்கே கானானில் இராட்சஸர்கள் எங்களைக் கொன்று விடுவார்களே. அதற்காகத் தான் கடவுள் இங்கே கூட்டி வந்தாரா ?’

‘கானானில் இராட்சசர்கள் யாரும் இல்லை. அங்கே இருப்பவர்களும் மனிதர்கள் தான். அங்கே எவ்வளவு வளம் இருக்கிறது தெரியுமா ? அங்கே சென்றால் நமக்கு எத்தனை தலைமுறை வேண்டுமானாலும் தாராளமாக வாழமுடியும்’

‘நீ எங்களை ஏமாற்றுகிறாய்… அங்கே போனால் நாம் அழிவது உறுதியென்று தான் உன்நனையும், காலேபையும் தவிர அனைவரும் சொல்கிறார்கள்’ மக்கள் சொன்னார்கள்.

யோசுவா எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர்கள் அவரை நம்பவில்லை. மோசே இவற்றையெல்லாம் கேள்விப்பட்டதும் மிகவும் கவலைப்பட்டார்.

‘கடவுளே.. நான் இப்போது என்ன செய்வது ? இந்த மக்களை நான் எப்படிச் சமாதானப் படுத்துவது ?’ என்று கடவுளை நோக்கி முறையிட்டார்.

கடவுள் மோசேக்குப் பதிலளித்தார்.
‘மோசே… என்னுடைய வழிகளில் நடக்கும் உன்னை நான் மிகவும் நேசிக்கிறேன். ஆனால் இந்த மக்கள் என்னுடைய வழிகளை விட்டு விலகிப் போகிறார்கள். யாரும் என்னை நம்பவில்லை. எனவே நான் இந்த மக்கள் அனைவரையும் கொல்லப் போகிறேன்’

‘ஐயோ… கடவுளே… நாம் இவ்வளவு கஷ்டப்பட்டோ மே. எல்லாம் வீணாய்ப் போய்விடும் அல்லவா ? எனவே தயவு செய்து யாரையும் அழிவுக்குட்படுத்த வேண்டாம்’

‘இல்லை.. இந்த மக்களைத் திருத்தவே முடியாது. இவர்கள் அழியட்டும்’ கடவுளின் கோபம் குறையவில்லை.

‘கடவுளே… நீர் இவர்களைக் கொன்றால் அந்த செய்தியை எகிப்தியர்களும் அறிவார்கள். பின் அவர்கள் உம்மைப் பழிப்பார்களே. இஸ்ரயேலரின் கடவுள் இஸ்ரயேலர்களைக் கொல்வதற்காக எகிப்திலிருந்து கூட்டிப் போனார் என்பார்களே’ மோசே சொன்னார்.

மோசேயின் தொடர் வேண்டுதல்களால் கடவுளின் கோபம் குறைந்தது.

‘சரி.. ஆனாலும் இந்த மக்கள் என்னைப் பழித்ததால் , என்னைப் பழித்த, என்னை நம்பாத யாருமே கானான் நாட்டில் நுழையமாட்டார்கள். பன்னிரு தலைவர்களில் யோசுவா, காலேப் இருவரைத் தவிர வேறு தலைவர்கள் யாரும் கானானைக் காணமாட்டார்கள்’ கடவுள் சொல்ல மோசே அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தார்.

‘அதுமட்டுமல்ல. இதோ கண்ணுக்கெட்டும் தூரத்தில் இருக்கும் கானான் நாட்டிற்கு இந்த மக்கள் நேரடியாகப் போகமாட்டார்கள். இன்னும் நாற்பது ஆண்டுகள் இந்தப் பாலை நிலத்தில் சுற்றித் திரிந்தபிறகு தான் இவர்களை நான் கானான் நாட்டுக்குள் அனுப்புவேன்’ கடவுள் சொன்னார். மோசே அமைதியாய்க் கேட்டுக் கொண்டிருந்தார்.

கடவுளின் வாக்கு பலித்தது. கானானை அடையும் முன் இஸ்ரயேலர்கள் நாற்பது ஆண்டுகள் பாலைவனத்தில் சுற்றித் திரிந்தார்கள்.

நன்றி: சகோதரர் சேவியர்,
இவருடைய படைப்புக்களை படிக்க விரும்பினால்
www.xavi.wordpress.com

உலகம் உருவான கதை 

 
 

மண்ணுலகம் உருவமில்லாமல், விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலையில் இருந்தது. எங்கும் இருளும் தண்ணீரும் மட்டுமே நிறைந்திருந்தன. கடவுளின் ஆவி மட்டும் தண்ணீரின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தது. வெளிச்சம் இன்னும் மண்ணுலகுக்கு அறிமுகமாகியிருக்கவில்லை.

ஒரு நல்ல உலகைப் படைக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்தார். அவருடைய கற்பனைகளில் ஒரு உலகம் விரிந்தது. அந்த உலகை நிஜத்தில் கொண்டு வரவேண்டும் என்று கடவுள் நினைத்தார். அதற்கு முதல் தேவை வெளிச்சம். இருளுக்குள் கிடக்கும் உலகைத் தூசு தட்ட முதல் தேவை வெளிச்சம்.

ஒளி தோன்றுக !

இதுதான் படைப்பின் துவக்கத்தில் கடவுள் உச்சரித்த முதல் வார்த்தை. அதுவரை இருளுடன் மட்டுமே அறிமுகம் கொண்டிருந்த உலகத்தின் மீது முதன் முதலாக ஒரு வெளிச்சக் கீற்று வானிலிருந்து வந்து விழுந்தது. அந்த வெளிச்சம் மெல்ல மெல்ல பூமியின் மேலிருந்த இருளை வெளியேற்றியது.

கடவுள் வெளிச்சத்தைப் பார்த்தார். உருவமற்ற பூமி முதன் முறையாக தன் அழகற்ற முகத்தை வெளிச்சத்தில் காட்டியது. முதல் படைப்பான ஒளி கடவுளுக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்தது. ஆனாலும் எப்போதுமே வெளிச்சமாய் இருப்பது நல்லதல்ல, வெளிச்சமும் இருளும் மாறிமாறி வரவேண்டும் அப்போது தான் நன்றாக இருக்கும் என்று கடவுள் நினைத்தார்.

அதன்படியே கொஞ்சநேரம் வெளிச்சம், கொஞ்ச நேரம் இருள் என ஒரு நாளை இரண்டாகப் பிரித்தார். இப்போது கடவுளுக்கு முழு திருப்தி ! வெளிச்சமாய் இருக்கும் காலத்தைப் பகல் என்றும் இருளாய் இருக்கும் காலத்தை இரவு என்றும் கடவுள் பெயரிட்டார். அது தான் உலகில் நடந்த முதல் பெயர்சூட்டு விழா. அந்த நிகழ்ச்சி முடிந்தபோது முதல் நாள் முடிவுறிருந்தது.

மறு நாள் கடவுள் வெளிச்சத்தில் இருந்த பூமியைப் பார்த்தார். தண்ணீரும், தரையும் பின்னிப் பிணைந்து  ஒரு அழகற்ற, பயனற்ற நிலையில் இருந்தது பூமி. இந்தத் தண்ணீரை இரண்டாகப் பிரித்து வானத்துக்கு மேலே ஒரு பாகத்தையும் பூமியிலே இன்னொரு பாகத்தையும் வைத்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் நினைத்தார்.அப்படியே செய்தார்.

பூமியிலிருந்த தண்ணீரின் ஒருபகுதி வானத்துக்கு மேலே இடம்பெயர்ந்தது. மிச்ச தண்ணீர் தாய்வீடான பூமியிலேயே தங்கிவிட்டது. வானத்தைக் கடவுள் விண்ணுலகம் என்றும், பூமியை மண்ணுலகம் என்றும் பெயரிட்டார். படைத்தலின் இரண்டாம் நாள் பணி அத்துடன் முடிவடைந்தது.

தண்ணீரும் தரையும் ஆங்காங்கே சிதறிச் சிதறிக் கிடப்பதை விட தண்ணீர் ஓரிடத்திலும், தரை ஓரிடத்திலும் இருந்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் எண்ணினார். ‘பூமியிலே ஆங்காங்கே கிடக்கும் தண்ணீர் எல்லாம் ஒரே இடத்தில் வந்து சேரட்டும்’ என்று கட்டளையிட்டார்.

 பூமியில் கிடந்த தண்ணீரெல்லாம் உடனே ஓடி ஓரிடத்தில் வந்து சேர்ந்தது. மிகப்பெரிய தண்ணீர்ப் பரப்பு ஒன்று உருவானது. தண்ணீரெல்லாம் கைகோர்த்து நின்ற மிகப் பெரிய நீர் நிலையைக் கடவுள் பெருங்கடல் என்று பெயரிட்டார். இப்போது தண்ணீர் வடிந்து போன கட்டாந்தரை மிகப் பெரிய அளவில் அவருடைய முன்னால் கிடந்தது. கடவுள் மகிழ்ந்தார். ஆனால் தரை அழகில்லாமல் வெறுமையாக இருந்தது. அழகில்லாமல் இருக்கும் தரையை எப்படி அழகாக்குவது என்று கடவுள் யோசித்தார்.

நிலத்தில் ஏராளமான புல்வெளிகளையும், செடிகளையும், மரங்களையும் கடவுள் வளரச் செய்தார். வெறுமையாய்க் கிடந்த தரையில் திடீரென விதவிதமான செடிகளும், மரங்களும், அழகிய புல்வெளிகளும் தோன்றின. இப்போது தரை வெறுமையாக இல்லாமல் அழகானதாக மாறியது. மண்ணுலகு தன் பரப்பு முழுவதும் பச்சை போர்த்திச் சிரித்த போது காலையும் மாலையும் சேர்ந்து மூன்றாம் நாள் முடிவுற்றிருந்தது.

உலகத்துக்குப் பகலையும் இருளையும் கொண்டு வந்த கடவுள், இரண்டையும் ஆட்சி செய்ய இரண்டு ஒளிப் பிழம்புகள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கணித்தார். ஒளிப்பிழம்புகள் மாறி மாறி வருவதை வைத்துக் காலங்களைக் கணிக்கவும் முடியும் என்று கடவுள் உணர்ந்தார்.

எனவே பகலை ஆள ஒரு மிகப் பெரிய ஒளிப்பிழம்பையும், இரவை ஆள இன்னொரு ஒளிப்பிழம்பையும் கடவுள் நான்காவது நாளில் படைத்தார். அந்த இரண்டு ஒளிப்பிழம்புகளையும் வானத்திலிருந்து ஆட்சி செய்யுமாறு கட்டளையிட்டார். வானம் ஒளிப்பிழம்பைச் சுமந்ததும் அழகானதாக மாறியது.

இப்போது பூமியில் வெளிச்சம் தேவையான அளவுக்குக் கிடைத்தது. வானத்தின் பரப்பில் ஒளிப்பிழம்புகளுடன் ஏராளமான விண்மீன்களையுன் கடவுள் படைத்தார். இப்போது வானம் வெளிச்ச மயமாக எழிலின் இருப்பிடமாக மாறியது. நான்காவது நாள் படைப்பில் கடவுள் மிகவும் திருப்தியடைந்தார்.

தன்னுடைய நான்கு நாள் படைப்பையும் ஐந்தாவது நாளில் பார்வையிட்டார் கடவுள். அழகிய பூமி, நீள் கடல், வெளிச்ச வானம் என எல்லாம் மிக அழகாக இருந்தன. தண்ணீரிலும் தரையிலும் இனிமேல் உயிரினங்கள் தோன்றினால் அது பூமியை மேலும் அழகுபடுத்தும் என்று கடவுள் ஏராளமான கடல்வாழ் உயிரினங்களையும், வானத்துப் பறவைகளையும் படைத்தார்.

கடல் முழுவதும் மீன்களும் கடல்வாழ் உயிரினங்களும் நீத்தத் துவங்கின, அவை தண்ணீரின் மேல் குதித்தும், நீர்த்தாவரங்களின் இடையே ஓடியும் விளையாடியதைக் கண்ட கடவுள் ஆனந்தமடைந்தார். வானத்துப் பறவைகள் அழகழகான சிறகுகளை அடித்து மரங்களிடையே ஆனந்தமாய் சுற்றித் திரிவதைக் கண்டு கடவுள் மிகவும் திருப்தியடைந்தார். நீங்கள் எல்லாம் பலுகிப் பெருகி இந்த பூமியின் மெளனத்தைக் கலையுங்கள் என்று அவற்றை வாழ்த்தினார். ஐந்தாவது நாள் படைப்பைக் கடவுள் அத்துடன் முடித்துக் கொண்டார்.

ஆறாவது நாளில் ஆண்டவர், நிலத்தில் ஊர்வன, காட்டு விலங்குகள், கால்நடைகள் எல்லாம் வேறு வேறு இனங்களில் தோன்றட்டும் என ஆணையிட்டார். பறவைகள் வானத்தில் பறந்து திரிய, விலங்குகள் பூமியில் அலைந்து திரிந்தன. அவை வெவ்வேறு இனங்களில், வெவ்வேறு வடிவங்களில் பூமியை நிறைத்தன. கடவுள் தான் படைத்த விலங்குகளோடு பேசினார். நீங்களும் பலுகிப் பெருகி பூமியை நிறையுங்கள் என்று வாழ்த்தினார்.

தன்னுடைய் ஆறு நாள் படைப்பையும் கடவுள் பார்த்து ரசித்தார். ஆனாலும் ஒரு குறை அவர் கண்களுக்குத் தெரிந்தது. பூமியில் பறவைகள், விலங்குகள், அழகிய தாவரங்கள் எல்லாம் இருக்கின்றன, கடலில் நீர்வாழ் உயிரினங்கள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் இவற்றையெல்லாம் பூமியிலிருந்து ஆட்சி செய்ய ஒரு உயிரினத்தைப் படைத்தால் நன்றாக இருக்குமே என்று கடவுள் யோசித்தார்.

விலங்குகளில் ஒன்றையோ, பறவைகளில் ஒன்றையோ, நீர்வாழ் உயிரினங்களில் ஒன்றையோ பூமியை ஆள்வதற்காகத் தேர்ந்தெடுத்தால் சிறப்பானதாக இருக்காது என்று அவருக்குத் தோன்றியது. எனவே ‘என்னைப் போன்ற வடிவில் ஒரு உயிரினத்தைப் படைப்பேன். அவனை மனிதன் என்று அழைப்பேன், அவனிடம் இந்தப் பூமியை ஆளும் பொறுப்பை ஒப்படைப்பேன்’ என்று கடவுள் தனக்குள்ளே சொல்லிக் கொண்டார்.

இதுவரை படைத்த அனைத்தையும் கட்டளையிட்டு உருவாக்கிய கடவுள் மனிதனை மட்டும் வித்தியாசமாகச் சிறப்பாகப் படைக்க வேண்டும் என்று விரும்பினார். ‘மனிதன் தோன்றட்டும்’ என்னும் ஒற்றைவாக்கில் மனிதனைப் படைத்தால், அவனுக்கும் இதுவரை தான் படைத்த உயிரினங்களுக்கும் இடையே வேறுபாடு இல்லாமல் போய்விடும் என்று எண்ணிய கடவுள், மனிதனை தன்னுடைய உழைப்பினாலும், உயிரினாலும் உருவாக்கவேண்டும் என்று தீர்மானித்தார்.

தரையில் அமர்ந்து கொஞ்சம் மண்ணைச் சேகரித்தார். அந்த மண்ணை வைத்துக் கடவுள் தன்னைப் போன்ற ஒரு உருவத்தை உருவாக்கினார். உலகில் உருவாக்கப் பட்ட முதல் சிற்பம் அது தான். உலகின் முதல் சிலை அந்த மனித சிலை தான். கடவுள் மனிதனின் உருவத்தைச் செய்து முடித்ததும் குனிந்து அவனுடைய நாசிகளில் தன்னுடைய உயிர் மூச்சை ஊதினார்.

மனிதன் உயிர்பெற்றான் கடவுளின் உயிர்மூச்சால் உயிர்பெற்றதால் அவனுக்குள் தெய்வத் தன்மை நிறைந்திருந்தது. தன்னுடைய கண்ணைத் திறந்து அவன் கடவுளைப் பார்த்தான். கடவுள் புன்னகைத்தார்.  தன்னுடைய உடல் உழைப்பும், உயிர் மூச்சும் உருவாக்கிய மனிதனை அவர் நேசத்துடன் அணைத்துக் கொண்டார்.

மனிதனைப் படைத்த கடவுள் பூமியைப் பார்த்தார். எந்த இடமும் மனிதனைத் தங்கவைக்கத் தகுதியானதாய்த் தோன்றவில்லை. எனவே கடவுள் ஒரு தோட்டத்தை அமைத்தார். அதுதான் கடவுளின் ஏதேன் தோட்டம். ஏதேன் வானக சுவர்க்கத்தின் மண்ணக வடிவமாய் இருந்தது.

அழகிய மரங்கள் தோட்டம் முழுவதும் நிறைந்திருந்தன. மரங்கள் மனிதனின் பசியைப் போக்க சுவையான பழங்களை கிளைகளெங்கும் தொங்கவிட்டிருந்தன. அழகிய பறவைகள் மரங்களில் அமர்ந்து சிறகடித்தும், குரலெழுப்பியும் ஏதேனை இசையின் இருப்பிடமாக மாற்றின. மலர்களை தங்கள் முதுகில் ஏந்தியபடி ஓடும் பீசோன், கீகோன், திக்ரீசு, யூப்பிரத்தீசு என்னும் நான்கு அற்புத ஜீவ நதிகள் ஏதேனுக்குள் ஓடின.

அந்தத் தோட்டத்தின் நடுவே இரண்டு முக்கியமான மரங்கள் இருந்தன. ஒன்று ஜீவ விருட்சம், இன்னொன்று ‘நன்மை தீமை அறியும் மரம்’. ஏதேன் தோட்டம் கடவுளின் கற்பனைகளை நிஜத்தில் எடுத்து வைத்தது. ஏதேன் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்தக் கடவுள், இதுதான் மனிதனுக்குத் தகுதியான இடம் என்று சொல்லி தான் படைத்த மனிதனை அங்கே தங்கச் செய்தார்.

ஆறு நாட்களாகத் தான் படைத்த பூமியையும், உயிரினங்களையும் கடவுள் பார்வையிட்டார். அனைத்துமே மிகவும் திருப்திகரமாக இருந்தன. ஆறு நாட்களுக்கு முன் உருவமற்றிருந்த பூமி இப்போது அழகும். இன்னிசையும் நிறைந்த அழகிய இடமாக மாறியிருந்தது. தன்னுடைய படைப்பில் மகிழ்ந்த கடவுள் ஏழாவது நாளில் ஓய்வெடுத்தார்.

பின் கடவுள் ஏதேன் தோட்டத்திற்குச் சென்று மனிதனைப் பார்த்தார். அவன் நதிகளில் குதித்து, மரங்களில் கனிகளைப் பறித்துத் தின்று ஆனந்தமாக இருந்தான். கடவுள் அவனை ஏதேன் தோட்டத்தின் நடுவே இருந்த மரத்தின் அருகே கூட்டிச் சென்று ‘ இதோ.. இந்தத் தோட்டத்திலும், இந்த உலகத்திலும் உள்ள எல்லாமே உனக்குச் சொந்தமானவை தான். ஆனால் இந்த ஒரு மரத்தின் கனியை மட்டும் நீ உண்னக் கூடாது. இதன் பெயர் நன்மை தீமை அறியும் மரம்.’ என்று கடவுள் மனிதனுக்கு தன்னுடைய முதல் கட்டளையைக் கொடுத்தார். அதுதான் கடவுளிடமிருந்து மனிதன் பெற்றுக் கொண்ட முதல் கட்டளை. மனிதன் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தான். கடவுள் அவனையும் அழைத்துக் கொண்டு ஏதேனை விட்டு வெளியே வந்தார்.

‘இதோ இந்த பூமி முழுவதும் உனக்கே சொந்தம். உனக்கு விருப்பமானவற்றை உண்டு, விருப்பமானதைச் செய்து மகிழ்ச்சியாக இரு. இந்த விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்தையும் நான் உனக்காகத் தான் உருவாக்கியிருக்கிறேன். நீ எனக்கு மட்டும் பணிந்திரு, மற்றவை அனைத்தையும் ஆட்சி செய். இப்போது நான் படைத்த இந்த உயிரினங்களுக்கு நீ பெயரிடவேண்டும்’. கடவுள் சொன்னார்.

கடவுள் ஒவ்வொரு விலங்கினருகிலும் மனிதனை அழைத்துச் சென்றார். அவன் தன்னுடைய மனதில் தோன்றிய ஒரு பெயரைச் சொல்ல அதுவே அந்த இனத்தின் பெயரானது. அவ்வாறே அவன் பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் அனைத்திற்கும் பெயரிட்டான். மனிதனின் முதல் பணி அத்துடன் முடிவடைந்தது.

மனிதன் அனைத்திற்கும் பெயரிட்டு முடித்தபின் ஏதேன் தோட்டத்திற்குத் திரும்பினான். கடவுள் பார்த்தார். எல்லா உயிரினங்களும் ஜோடி ஜோடியாக அலைய மனிதன் மட்டும் தனியாக இருக்கிறானே என்று நினைத்து வருந்தினார். அவர் எல்லா காட்டு விலங்குகளையும் கவனித்துப் பார்த்தார், எல்லா பறவையினங்களையும் பார்வையிட்டார் ஆனால் எதுவுமே மனிதனுக்குத் தக்க துணையாகத் தோன்றவில்லை. மனிதனைப் போன்ற தோற்றத்தில், மனிதனோடு நல்ல அன்புடன் உறவாடக் கூடிய ஒரு உயிரைத் தான் மனிதனுக்குத் துணையாக்க வேண்டும் என்று கடவுள் தீர்மானித்தார்.

அன்று இரவில் மனிதன் தூங்கிக் கொண்டிருக்கையில் அவனருகில் கடவுள் வந்து நின்றார். மண்ணினால் இன்னொரு உருவத்தைச் செய்தால் அது இன்னொரு இனமாகி விடும். எனவே மனிதனிலுருந்தே ஒரு உயிரைப் படைக்கவேண்டும். அப்போது தான் அது மனிதனின் உயிரின் பாகமாகவும், உடலின் பாகமாகவும் இருக்கும் என்று கடவுள் நினைத்தார்.

அவனுடைய உடம்பில் எந்த பகுதியிலிருந்து மனிதனை உருவாக்குவது என்னும் குழப்பம் கடவுளுக்கே ஏற்பட்டது. காலிலிருந்து இன்னொரு உயிரைப் படைத்தால் அவள் மனிதனை விடக் கீழானவளாகக் கருதப் படலாம், தலையிலிருந்து படைத்தால் மனிதனை அடக்கி ஆள முயலலாம், எனவே விலா எலும்பிலிருந்து ஒரு உயிரைப் படைக்க வேண்டும் என்று கடவுள் திட்டமிட்டார்.

அப்போது தான் மனிதனும், மனிதனின் துணையும் ஒரே நிலையில் இருப்பார்கள். அவர்கள் இருவருமே சமமானவர்களாகக் கருதப் படுவார்கள். யாரும் யாரையும் விட உயர்ந்தவர் என்றோ, தாழ்ந்தவர் என்றோ எண்ணிக் கொள்ள மாட்டார்கள் என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டார். தூங்கிக் கொண்டிருந்த மனிதனுக்குக் கடவுள் ஆழ்ந்த தூக்கத்தைக் கட்டளையிட்டார். அவன் மயக்க நிலையில் விழுந்தான். அப்போது கடவுள் அவனுடைய விலா எலும்பிலிருந்து ஒன்றை எடுத்து அதை மனிதனின் துணையாக உருவாக்கினார்.

மனிதன் விழித்தெழுந்ததும் கடவுள் அவனிடம்,’ இதோ… இந்த உயிரை நான் உன் துணைவியாகத் தருகிறேன். உன்னுடைய விலா எலும்பிலிருந்து இவளை நான் உருவாக்கி இருக்கிறேன். எனவே இவளும் நீயும் ஒரே உடலாகவும், ஒரே உயிராகவும் வாழுங்கள்’ என்றார். மனிதன் மகிழ்ந்தான்.
‘இவள் என் எலும்பின் எலும்பும், சதையின் சதையும் ஆனவள். எனவே இவளுக்கு நான் பெண் என்று பெயரிடுகிறேன் என்றான்’. மனிதன் துணையுடன் வாழத்துவங்கினான். இருவருமே நிர்வாணத்தை அணிந்திருந்தார்கள், ஆனாலும் வெட்கத்தை அறிந்திருக்கவில்லை. மனிதனின் ஆனந்தத்தைக் கண்ட கடவுள் தன்னுடைய படைப்பு முழுமையடைந்து விட்டதை அறிந்து மகிழ்ந்தார்.

நன்றி: சகோதரர் சேவியர்,
இவருடைய படைப்புக்களை படிக்க விரும்பினால்
www.xavi.wordpress.com

யோனாவைத் துரத்திய கடவுள்

யோனா இறைவிசுவாசமோ, இறைபக்தியோ அதிகம் இல்லாத ஒரு மனிதர். ஒரு நாள் கடவுள் அவர் முன்னால் வந்து நின்றார்.

‘யோனா… நினிவே நகர மக்கள் தவறான வழிகளில் போய்க் கொண்டிருக்கிறார்கள். நீ அங்கே போய் கடவுள் உங்களை அழிக்கப் போகிறார் என்று அறிவி’ என்று சொல்லிவிட்டு மறைந்தார்.

யோனா பயந்தார். ‘இதெல்லாம் என்னால் முடியாத காரியம். நான் போய் நினிவே நகரில் கடவுளுடைய வார்த்தையைச் சொன்னால் என்னைக் கல்லால் எறிந்து கொல்வார்களோ, இல்லை பைத்தியக்காரன் என்று துரத்துவார்களோ தெரியாது’. என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டான்.

இதிலிருந்து தப்பியாக வேண்டும். கண்டிப்பாக நான் நினிவேக்குச் செல்ல மாட்டேன் என்று சொல்லிக் கொண்டே அதற்கு எதிர் திசையில் உள்ள தர்கீசு என்னும் நகருக்குப் போக தீர்மானித்தார். தர்கீசுக்குக் கப்பல் ஒன்று விரைவில் செல்ல இருப்பதாக அறிந்த யோனா விரைந்து சென்று கட்டணம் செலுத்தி கப்பலுள் நுழைந்து கடல் பயணத்தைத் துவங்கினார்.

‘அப்பாடா ஒருவழியாகத் தப்பித்தோம்’ என்று, பூனை கண்ணை மூடிக் கொண்டு பால் குடித்த கதையாக, நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டே கப்பலில் அடித்தளத்தில் நிம்மதியாகத் தூங்கினார்.

கடவுள் யோனாவை விடவில்லை. யோனா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது கடலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

மாலுமிக்கோ, பயணிகளுக்கோ காரணம் புரியவில்லை.
‘எத்தனையோ காலமாக இந்த வழியாக பயணம் செய்கிறோம், எப்போதுமே இல்லாத கடல் கொந்தளிப்பு இப்போது வந்திருக்கிறதே !’
‘கால நிலை கூட நன்றாகத் தானே இருக்கிறது ? எப்படி இந்தத் திடீர்க் கொந்தளிப்பு ஏற்பட்டது ‘ என தங்களுக்குளே பேசிக் கொண்டனர். கடல் கொந்தளிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்க பயணிகள் எல்லோரும் பயந்து நடுங்க ஆரம்பித்தார்கள்.

‘இப்படியே போனால் கப்பல் உடைந்து கடலில் மூழ்கிவிடுவது உறுதி. எனவே கனமான பொருட்களையெல்லாம் கடலில் தூக்கி வீச வேண்டும்’ மாலுமி ஆணையிட்டான்.

அதன்படி கனமான மூட்டைகளும், தானியங்களும் கடலில் தூக்கி வீசப்பட்டன. இருந்த பொருட்கள் எல்லாம் கடலில் வீசப்பட்ட பின்னும் கப்பல் கவிழும் நிலையிலேயே இருந்தது. கடல் கொந்தளிப்போ, கப்பலில் தடுமாற்றமோ நிற்கவில்லை. கடலின் பெரிய அலைகளில் சிக்கி எப்போது வேண்டுமானாலும் கப்பல் உடையலாம் என்னும் நிலை. மாலுமிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இந்தப் பயணம் இறுதிப் பயணம் ஆகிவிடும் போலிருக்கிறதே என்று அவரும் கலங்கினார்.

‘எல்லோரும் அவரவர் கடவுளை நோக்கி செபியுங்கள். ஏதாவது கடவுள் வந்தாகிலும் நம்மைக் காப்பாற்றட்டும்’ என்றார் மாலுமி. எங்கும் பதட்டம் பரவிக் கிடந்தது.

எல்லோரும் ஒரே குரலாக அவரவர் கடவுளர்களிடம் மன்றாடத் துவங்கினர். பிரார்த்தனைகள் கப்பலில் எல்லா பாகங்களிலும் கேட்டன. ஆனாலும் கடல் கொந்தளிப்பு சற்றும் குறையக் காணோம். இதையெதையும் அறியாமல் யோனா நிம்மதியாகக் கடலின் அடித்தட்டில் இன்னும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.

‘என்ன இது.. இப்படித் தூங்கிக் கொண்டிருக்கிறாயே… விஷயம் தெரியாதா உனக்கு ? கப்பல் உடையப் போகிறது. நாமெல்லாம் சாகப் போகிறோம்…’ கீழ்த்தளத்திலிருந்த மாலுமிகளில் ஒருவர் யோனாவை எழுப்பினார்.

‘கப்பல் உடையப் போகிறதா ? ஏன் ?’ யோனா பதட்டமானார்.

‘ஏனென்று தெரியவில்லை. காலநிலை நன்றாகத் தான் இருக்கிறது. பயணமும் பழகிய வழியில் தான் போகிறது. ஆனாலும் இந்த எதிர்பாராத கடல் கொந்தளிப்பு நிற்கவில்லை. என்னவென்று தெரியாமல் எல்லோரும் குழம்பிப் போயிருக்கிறோம்’ அவர் சொல்ல, யோனாவுக்கு பயம் வந்தது. கடவுள் தான் தம்மைத் துரத்துகிறார் என்பது அவருக்குச் சட்டென விளங்கியது.

மாலுமி பயணிகளைப் பார்த்து , ‘இந்தக் கொந்தளிப்பு சாதாரணமானதல்ல என்றே நினைக்கிறேன். இந்தக் கப்பலில் இருப்பவர்கள் யாரோ பெரிய தப்பு செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதனால் தான் இந்தக் கடல் கொந்தளிப்பு. உண்மையைச் சொல்லுங்கள் யார் அது ? ‘  என்று கேட்டார்.

யோனா மெளனமாய் இருந்தார்.

‘சரி.. நீங்கள் யாரும் பேசப் போவதில்லை. எனவே நாம் எல்லோருடைய பெயரையும் எழுதி சீட்டுக் குலுக்கிப் போடுவோம். யாருடைய பெயர் வருகிறதோ அவரே தப்பு செய்தவர்.’ மாலுமி சொன்னார். பயணிகள் அமைதியானார்கள்.

அதன்படி எல்லோருடைய பெயரும் எழுதப்பட்டன. சீட்டுகள் ஒரிடத்தில் கொட்டி குலுக்கப்பட்டு ஒரு சீட்டு எடுக்கப் பட்டது. எல்லோரும் பதட்டமாய் பார்த்துக் கொண்டிருந்தார்கள். யாருடைய பெயர் வரப் போகிறதோ என்று ஒவ்வொருவரும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு அமைதியாய் இருந்தார்கள்.
மாலுமி எடுத்த சீட்டை வாசித்தார்.

‘யோனா’

மாலுமி யோனாவை அழைத்தார்,’ யோனா ! உன்னுடைய பெயர் தான் வந்திருக்கிறது. உன்னால் தான் எங்களுக்கு மிகப்பெரிய சோதனை வந்திருக்கிறது என நினைக்கிறோம்… நீ யார் ? உண்மையைச் சொல்’ என்றார்.

யோனா நடுங்கினார். ‘ உண்மையைச் சொல்லிவிடுகிறேன். என்பெயர் யோனா. கடவுள் என்னை நினிவே நகருக்குப் போகச் சொன்னார். நான் தான் அவரிடமிருந்து தப்பி ஓடுகிறேன்’ என்று உண்மையைச் சொன்னார்.

‘கடவுளிடமிருந்து தப்ப முடியுமா மூடனே… உன்னை இப்போது என்ன செய்வது ?’ மாலுமி கோபத்தில் கத்தினார்.

‘என்னைக் கடலில் எறிந்து விடுங்கள்….’ யோனா கூறினார்.

‘உன்னைக் கடலில் எறிந்தால் கொந்தளிப்பு நின்று விடுமா ? ஒரு அப்பாவியைக் கொன்ற பழி என்மேல் வராதா’ மாலுமி கேட்டார்

‘வராது. என்னைக் கடலில் எறிந்து விடுங்கள். கொந்தளிப்பு கண்டிப்பாக நிற்கும்’ யோனா மீண்டும் கூறினார்.

மாலுமி யோனாவைப் பிடித்துக் கடலில் தள்ளினான். கடல் திடீரென அமைதியாயிற்று ! கடலிலிருந்த ஒட்டு மொத்த மக்களும் ஆச்சரியத்தாலும், பயத்தாலும் அமைதியானார்கள். யோனாவின் கடவுளுக்குந் நன்றி செலுத்தினார்கள்.

கடலுக்குள் விழுந்த யோனாவை தண்ணீர் தலைகீழாகப் புரட்டி, ஆழ்கடலில் தள்ளியது. ஆழ்கடலில் பாசிகளில் சிக்கிய யோனா மரணம் தன் கை தொடும் தூரத்தில் வந்துவிட்டது என்பதை அறிந்து ‘ கடவுளே…காப்பாற்றும் ‘ எனக் கதறினார். அப்போது ஒரு பெரிய மீன் வந்து அவரை முழுசாய் விழுங்கியது !

யோனா… மீனின் வயிற்றுக்குள் கிடந்தார். சாவு சம்பவிக்கவில்லை என்பதை அறிந்த யோனா, எல்லாம் கடவுளின் செயல் தான் இனிமேல் தான் கடவுளின் வார்த்தைகளை மீறக்கூடாது என முடிவெடுத்தார்.

‘கடவுளே… என்னை சாவிலிருந்து விடுவியும். நான் உம் வழியை விட்டு விலக மாட்டேன். உம் கட்டளைகளைக் கடைபிடிப்பேன்’ என யோனா மீனின் வயிற்றுக்குள்ளிருந்தே வேண்டுதல் நடத்தினார்.

மூன்று நாட்களுக்குப் பின் அந்த மீன் அவரைக் கரையில் துப்பியது !

யோனா தான் உயிர்பிழைத்ததை அறிந்து மகிழ்ந்தார். நினிவே நகருக்கு ஓடினார்.

நினிவே நகர வீதிகள் எங்கும்,’ இன்னும் நாற்பது நாட்களிலே நினிவே அழிக்கப் படும்’ என்று அறிவித்தார்.

‘நினிவே அழிக்கப்படுமா ? யார் நீ… எங்கிருந்து வருகிறாய் ?’ மக்கள் கேள்வி கேட்டனர்.

‘நான் கடவுளிடமிருந்து வருகிறேன்’ என்று சொன்ன யோனா, தன் கதையை முழுவதும் மக்களுக்குத் தெரிவித்தான். மக்கள் திகிலடைந்தார்கள்.செய்தி மன்னனின் காதுக்குப் போயிற்று. மன்னனும் கலங்கினான். தன் நாடு தவறான பாதையில் தான் போகிறது என்பது அவனுக்குத் தெரிந்திருந்தது எனவே உடனடியாக ஒரு ஆணை பிறப்பித்தான்.

‘இன்றிலிருந்து நாற்பது நாட்கள் எல்லோரும் உண்ணா நோன்பு இருக்க வேண்டும். கால்நடைகளுக்குக் கூட உணவளிக்கக் கூடாது. மனிதர் அனைவரும் தங்கள் ஆடம்பர ஆடைகளை அவிழ்த்து விட்டு கோணிகளைக் கட்டிக் கொண்டு சாம்பலில் அமர்ந்து கடவுளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்… இது அரச ஆணை. யாரும் மீறக் கூடாது ! நம்முடைய நோன்பின் பொருட்டாகிலும் கடவுள் நம் நகரையும், நம்மையும் காக்கட்டும்’ என்று நகரெங்கும் அறிவித்தான்.

நினிவே நகர் முழுவதும் அந்த ஆனை புயல் வேகத்தில் அறிவிக்கப் பட்டது.

மக்கள் அனைவரும் அதன்படியே செய்தார்கள். எல்லோரும் கோணி உடுத்தி,’ கடவுளே எங்களை மன்னியும், இனிமேல் தவறிழைக்க மாட்டோ ம்’ என்று வேண்டினர்.

அவர்களுடைய கூட்டுப் பிரார்த்தனை பலனளித்தது. மக்கள் மனம் திருந்திவிட்டதைக் கண்ட கடவுள் நினிவேயை அழிக்கவில்லை. மக்கள் மகிழ்ந்தனர்.

யோனா மட்டும் கோபமடைந்தார். ‘ கடவுளே என்ன இது ? நகர் அழியும் என்று அறிவித்த நான் இப்போது உண்மையிலேயே பைத்தியக் காரனாகி விட்டேன். நீர் நகரை அழிக்காமல் என்னை அவமானத்துக்குள்ளாக்கி விட்டீர்’ என்று சினந்தான்.

‘சினங் கொள்ளாதே யோனா.. உன்னால் தான் நகர் திருந்தியிருக்கிறது என்று திருப்தி கொள். நான் நினிவேயை அழிக்காத காரணம் விரைவில் உனக்கே விளங்கும்’ என்றார்.

‘இல்லை கடவுளே… நீர் என்னிடம் சொன்னதன் படி நகரை அழிக்க வேண்டும்’ என்று சொல்லிவிட்டு யோனா கோபத்துடன் நகரை விட்டு வெளியேறினார். நகருக்கு வெளியே தூரத்தில் பொட்டல் காட்டில் ஒரு சின்ன பந்தல் அமைத்து அதன் நிழலில் அமர்ந்தார். கடவுள் எப்படியும் நினிவேயை அழிப்பார் அதை தூரத்திலிருந்து பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டார்.

அவருக்கு அருகே ஒரு ஆமணக்குச் செடி சட்டென முளை விட்டது. ஒருசில நாட்களிலேயே அது ஒரு செடியாக வளர்ந்தது. தனிமையில் இருந்த யோனா அதைக் கண்டு மகிழ்ந்தார். அதன் நிழலிலேயே தங்கி, அதனை ஒரு ஜீவன் போலப் பாவித்து அதனுடன் பேசிக் கொண்டிருந்தார்.

ஒருநாள் காலையில் யோனா கண்விழித்துப் பார்த்த போது அந்த ஆமணக்குச் செடி பட்டுப் போய்க் கிடந்தது. அதன் மூட்டில் அந்தக் செடியை அரித்து அழித்த புழு கொழுத்துக் கிடந்தது.

யோனா மிகவும் வருத்தமடைந்தார். ‘தான் நேசமாய் பராமரித்த தன்னுடைய செடி அழிந்து விட்டதே என்று மிகவும் கவலையடைந்தார். நானும் செத்துப் போயிருக்கலாம். எனக்கு வாழ்க்கை வெறுத்து விட்டது. எனக்கும் சாவு வரட்டும்.’ என்று கூறி குப்புறப் படுத்துக் கொண்டார்.

கடவுள் யோனாவை அழைத்தார்.
‘யோனா… என்னாயிற்று உனக்கு ? ஏன் கலங்குகிறாய் ?’

‘கடவுளே… என்னுடன் தோழமை கொண்டிருந்த ஒரே ஒரு செடியும் சட்டென்று வாடி விட்டதே. அதன் அழகிய இலைகளும், நிறமும் எல்லாம் போய் விட்டதே. பட்டுப் போன செடியைப் பார்க்கப் பார்க்க என்னால் தாங்க முடியவில்லை’

‘அது ஒரு சின்னச் செடிதானே?.. விட்டு விடு. ஏன் வருத்தப் படுகிறாய்?’ என்று கேட்டார்.

‘சின்னச் செடிதான் ஆனால் நான் மிகவும் நேசித்த செடியல்லவா அது…’ யோனா பதில் சொன்னான்.

‘சாவு வரட்டும் என மன்றாடும் அளவுக்கு நேசித்தாயா அதை ?’ கடவுள் கேட்டார்.

‘ஆம் கடவுளே.. என்னைக் கொன்றுவிடும். எனக்கு வாழப் பிடிக்கவில்லை’ யோனா வெறுப்பாகப் பேசினார்.

‘நீ விதைக்காத ஒரு விதையிலிருந்து முளைத்த ஒரு செடி அது. அதற்கு நீ நீரூற்றக் கூட இல்லை. மிகக் குறைந்த நாட்கள் தான் உன்னோடு அது இருந்தது. அதன் மீது நீ இவ்வளவு பாசம் வைக்கும் போது, நான் படைத்து பராமரித்து வரும் நினிவே நகரின் இலட்சக் கணக்கான மக்கள் மீது நான் இரக்கம் காட்டியது தவறா ?’ ஆண்டவர் கேட்டார்.

யோனா வினாடி நேரத்தில் புத்தி தெளிந்தார்.

‘கடவுளே என்னை மன்னியும். நான் சுயநலவாதியாய் சிந்தித்து விட்டேன். இப்போது உண்மை உணர்கிறேன். நான் அழியும் என்று சொன்ன நகர் அழிய வேண்டும் என்று அகந்தை கொண்டுவிட்டேன். உம்முடைய மனதை அறிந்து கொள்ள நான் முயற்சி செய்யவேயில்லை. என்னை மன்னியுங்கள்’ என்று பணிந்தார்.

அவர் நிமிர்ந்தபோது மனதுக்குள் சொல்ல முடியாத நிம்மதி நிறைந்திருந்தது.

நன்றி: சகோதரர் சேவியர்,
இவருடைய படைப்புக்களை படிக்க விரும்பினால்
www.xavi.wordpress.com


பாவமில்லையேல் கல் எறி


  
ஆலய வாசலில் ஒருமுறை
அலையாய் அலையும்
ஆட்களின் கூட்டம்.

விபச்சாரத் தவறுக்காய்
தீர்ப்பிடலின் திடுக்கிடலில்
பெண்ணொருத்தி
சபைநடுவில்.

பரிசேயரும்,
மறைநூல் வல்லுனரும்
இயேசுவை சோதிக்க
இக்கட்டாய் கேட்டனர்.

நீர் மதிக்கும் மோயீசன்
விபச்சாரக் குற்றம்
கல்லடி மரணத்துக்கானதென்று
கட்டளையிட்டார்.
நீர்
என்ன சொல்கிறீர்.

மோயிசனையே மறுதலிப்பீரா
இல்லை
இவளை
கல்லெறிந்து கொல்வதை
வழிமொழிவீரா ?

பெண்ணோ
காற்றில் அலையும்
முகிலாய்
திகில் அலையும் கண்களோடு
நடுங்கி நின்றாள்.

இயேசு
தலை தாழ்த்தி
தரையில் விரலால்
வரையத் துவங்கினார்

கேள்விகள்
மீண்டும் மீண்டும்
கர்த்தரின் காதுக்குள்
கொட்டப்பட்டது.

இமை நிமிர்த்திய
இயேசு,
வெறியரின் வேகம் பார்த்தார்.

எல்லோருடைய கைகளிலும்
கற்கள்.
கல்லெறிந்தால் அவளுக்குக்
கல்லறைதான்.

உங்களுள்
பாவமில்லாத கரம்
முதல் கல்லை
இப்பெண்மீது எறியட்டும்.

சொல்லியவர் மீண்டும்
தரையில் எழுதத் துவங்கினார்

ஆணிவேர் வெட்டுண்ட
அவஸ்தையில்,
கோடரி வீச்சில்
நிலை குலைந்த நாணல்
மண் மோதும் வேகத்தில்,

அவர்கள்
ஒருவர் பின் ஒருவராய்
கற்களை போட்டு விட்டு
கடந்து சென்றனர்.

தனிமையில் இருந்த பெண்ணிடம்
பரமன் கேட்டார்,
மாதே
யாருமே தீர்ப்பிடவில்லையா?

இல்லை என்றாள்
மரண வாசல் வரை சென்று
மறுபடியும்
உயிர் கொண்டவள்.

நானும் தீர்ப்பிடேன்.

பிறப்பின் சிறப்பு
இறப்பிலும் இருக்கட்டும்.
தவறுதல் தவிர்த்து
திருந்துதலே தெய்வீகம்.

மன்னிப்பு
தவறுகளுக்கான
அனுமதிச் சீட்டல்ல.
இனிமேல் நீ பாவம் செய்யாதே.

பாடம் கற்றுக் கொண்ட
பெண்
பாதம் பணிந்தாள்.

நன்றி: சகோதரர் சேவியர்,
இவருடைய படைப்புக்களை படிக்க விரும்பினால்
www.xavi.wordpress.com


மோசஸ் - வியப்பூட்டும் விடுதலைப் பயணம் !

எகிப்து  நாட்டில் எரேபியக் குடும்பமான இஸ்ரயேல் என்றழைக்கப்பட்ட யாக்கோபு-வின் குடும்பம் குடிவந்தபின் அவர்களுடைய வம்சம் தழைத்தது. இஸ்ரயேலையும் அவருடைய தலைமுறையினரையும் எகிப்திய மன்னர்களும் மக்களும் மிகவும் அன்புடனும், மரியாதையுடனும் நடத்தி வந்தார்கள். காலம் உருண்டோ டியது. பல தலைமுறைகள் தோன்றி மறைந்தன. எகிப்திற்கு புதிதாய் ஒரு மன்னன் அரியணை ஏறினான். எபிரேயர்களின் சோதனைக் காலம் அங்கே ஆரம்பமானது.

அரியணையேறிய மன்னன் தன் நாட்டைச் சுற்றிப் பார்த்தான். எங்கும் எபிரேயர்களின் கூட்டம். எகிப்தியர்களை விட வலிமையிலும், அழகிலும் திறமையிலும் சிறந்து விளங்கிய எபிரேயர்களின் கூட்டத்தைப் பார்த்த மன்னனுக்கு உள்ளுக்குள் பயம் வந்து உட்கார்ந்து கொண்டது. அவசரமாக அரசவையைக் கூட்டினான் மன்னன்.

‘நம் நாட்டில் எபிரேயர்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது. எனக்கு முன்பு ஆட்சி செய்தவர்களின் கண்களுக்கு அது தென்படவில்லை போலிருக்கிறது. இப்போதேனும் நாம் சுதாரிக்க வேண்டும். இல்லையேல் இஸ்ரயேலர்களின் எண்ணிக்கை நம்மை விட அதிகரித்துவிடும். அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படுமானால், எகிப்தியர்களின் பாடு திண்டாட்டம் தான். அப்புறம் பிழைக்க வந்த இஸ்ரயேலர்களால் நம்முடைய பிழைப்பு கெடும். நாம் சுதாரித்தாக வேண்டும்’

‘ஏன் மன்னா அப்படிச் சொல்கிறீர்கள் ?.. அவர்களால் நமக்கு என்ன ஆபத்து வந்து விடப் போகிறது ?’

‘ஏதேனும் அண்டை நாட்டு மன்னன் நம் நாட்டின் மீது படையெடுத்து வருகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். இஸ்ரயேலர்கள் அவர்களோடு சேர்ந்து நம்மை எதிர்க்கும் வாய்ப்பு இருக்கிறது அல்லவா ? அப்படி ஒரு நிலமை வந்தால் நாம் அன்னியர்களிடம் தோற்கடிக்கப் படுவோமே ?’

‘ஆம் மன்னா. இதுவரை யாரும் இப்படி யோசித்ததில்லை. இப்போது என்ன செய்யலாம் இஸ்ரயேலர்களை எகிப்தை விட்டுத் துரத்தி விடலாமா ?

‘ அதுவும் புத்திசாலித்தனமான யோசனையல்ல. அவர்கள் இப்போது  நாட்டை விட்டுப் போனால் கூட அவர்கள் எகிப்தின் செல்வங்களோடு தான் போவார்கள். அப்படிப் போனாலும் இழப்பு நமக்குத் தான். எகிப்தில் எகிப்தியர்களுக்கு பாதுகாப்பும் இருக்காது, வளங்களும் இருக்காது. இதற்கு புத்திசாலித்தனமாக ஏதாவது செய்தாக வேண்டும். எகிப்தின் செல்வங்களும் எகிப்தை விட்டுப் போகக் கூடாது. இஸ்ரயேலர்களின் கையும் ஓங்கக் கூடாது. ஏதேனும் வழி செய்தாக வேண்டும்’

‘என்ன செய்யலாம் என்பதையும் நீங்களே முடிவு செய்யுங்கள் அரசே… ‘அரசவை மன்னனை நோக்கி பணிவாய் நின்றது.

‘எனக்குத் தெரிந்த ஒரு சிறந்த வழி, இஸ்ரயேலர்களை எகிப்தியர்களின் அடிமைகள் ஆக்குவது தான். அவர்கள் நமக்கு அடிமைகளாக நாம் சொல்வதைக் கேட்டு நடப்பவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் நாட்டை விட்டுச் செல்லவும் அனுமதிக்கப் படக் கூடாது. அவர்களுடைய வலிமையை நாம் நம்முடைய எகிப்து நாட்டில் புதிய நகரைக் கட்டும் பணிகளுக்காய் செலவிட வைக்க வேண்டும்’ மன்னன் கூறினான்.

‘அப்படியே செய்யுங்கள் மன்னா’

அரசவையில் விவாதிக்கப் பட்ட விஷயம் அரச ஆணையானது ! எபிரேயர்கள் எகிப்தியர்களின் அடிமைகளாக வேண்டும். நகரங்களை நிர்மாணிக்கும் பணியில் அவர்கள் அடிமை வேலை பார்க்க வேண்டும்  ‘ மன்னனின் ஆணை இஸ்ரயேல் மக்களை அதிர்ச்சியின் உச்சியில் நிறுத்தியது. அவர்களுடைய சுதந்திரமும், இது வரை சேமித்த செல்வமும் அந்த ஒரே ஆணையால் பறிபோய்விட்டது. அரசனுடைய ஆணை ஆனந்தமாய் வாழ்ந்து வந்த இஸ்ரயேலர்களை ஒரே நாளில் அழுகைக்குள் தள்ளியது. அவர்கள் எகிப்தியர்களுக்கு அடிமைகளாய் ஆனார்கள்.

இஸ்ரயேலர்களை அடிமைப்படுத்திய எகிப்தியர்கள் அவர்களைக் கடுமையான வேலைகளைச் செய்ய வைத்தனர். இஸ்ரயேலர்கள் வலிமையானவர்கள் எனவே அவர்களைக் கொண்டு மன்னன் இரண்டு நகரங்களைக் கட்டத் தீர்மானித்தான். இஸ்ரயேல் மக்கள் அனைவரும் புதிய நகரம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சிறுவர், முதியவர், பெண்கள் என்ற பாகுபாடோ  சலுகைகளோ யாருக்கும் அளிக்கப்படவில்லை. அவர்கள் அனைவருமே  கடுமையான உழைப்பைச் செலுத்த வேண்டி இருந்தது. அடிமைகளின் உயிருக்கு எந்தவிதமான மதிப்பும் இருக்கவில்லை. நாள்தோறும் நூற்றுக்கணக்கான அடிமைகள் நகர் நிர்மாணிக்கும் பணியில் பெரிய பெரிய பாறைக் கற்களுக்கு அடியே நசுங்கியும், இடிபட்டும் இறந்து போனார்கள். அப்படி இறந்தவர்களைப் பற்றி யாருமே கவலைப் படவில்லை.

எபிரேயர்களுக்கு உணவு மட்டுமே வழங்கப் பட்டது. அவர்களுக்கு எதிர்த்துப் பேசும் உரிமையோ, மறுத்துக் கூறும் உரிமையோ தரப்படவில்லை. அதிகாலை முதல் நள்ளிரவு வரை அவர்கள் நகர் நிர்மாணிக்கும் பணிகளில் உயிரைக் கொடுத்து உழைத்தார்கள்.

ஆனாலும் அவர்களின் வம்சம் மட்டும் மேலும் மேலும் வளர்ந்து கொண்டே இருந்தது. ஆண்டுதோறும் அடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. அடிமைகளாய் இருந்தாலும் அவர்களுடைய வம்சம் வளரக் கூடாது என்று மன்னன் நினைத்தான். எனவே அவன் புதிதாய் ஓர் ஆணையிட்டான். அவன் மருத்துவப் பெண்களை அழைத்து,
‘ நீங்கள் இஸ்ரயேல் குலப் பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் போது ஆண் குழந்தை பிறந்தால் உடனே கொன்று விட வேண்டும்’ என ஆணையிட்டான்.

மருத்துவப் பெண்கள் மனம் வருந்தினார்கள். மன்னனின் ஆணை தவிர்க்க முடியாதது தான், ஆனாலும் அவர்கள் குழந்தைகளைக் கொல்லவில்லை.

சில ஆண்டுகளுக்குப் பின் மன்னன் நகர்வலம் வந்தபோது ஏராளமான சிறு ஆண்குழந்தைகள் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தன. மன்னன் சினந்தான். மருத்துவப் பெண்களை அழைத்தான்.

‘ஆண்குழந்தைகளைக் கொல்லவேண்டும் என்பதல்லவா என் கட்டளை ! நீங்கள் அதை மீறி விட்டீர்கள். நகர் முழுவதும் ஏராளம் இஸ்ரயேல் சிறுவர்களைப் பார்க்கிறேன். என்னுடைய கட்டளைய மீறிய உங்களுக்கு என்ன தண்டனை தெரியுமா ?’ மன்னன் கோபத்துடன் கேட்டான்.

‘மன்னா… மன்னியுங்கள். அரசருடைய ஆணையை மீறும் அளவுக்கு நாங்கள் அறிவிலிகள் அல்ல. அப்படிச் செய்தால் எங்கள் உயிர் எங்களிடம் இருக்காது என்பதும் எங்களுக்குத் தெரியாதா ? நாங்கள் உங்கள் கட்டளைகளை மீறியதேயில்லை’ மருத்துவப் பெண்கள் பணிவாய் சொன்னார்கள்.

‘பின் எப்படி இஸ்ரயேல் குலத்தில் ஆண் குழந்தைகள் விளையாடுகின்றன. பிறந்தவுடன் குழந்தைகள் இறக்காதது தானே இதற்குக் காரணம் ?’ மன்னன் மீண்டும் கோபத்தில் கத்தினான்.

‘மன்னா… அதற்குக் காரணம் நாங்களல்ல. அந்த இஸ்ரயேல் குலப் பெண்கள் தான். அவர்கள் மிகவும் வலிமையானவர்கள். நாங்கள் அவர்களுக்குப் பிரசவம் பார்க்கச் செல்லும்முன்பே அவர்கள் குழந்தைகளைப் பெற்று விடுகிறார்கள். எனவே எங்களுக்கு குழந்தைகளைக் கொல்லும் வாய்ப்பு கிடைப்பதில்லை. கிடைக்கும் வாய்ப்புகளை நாங்கள் தவற விட்டதேயில்லை. எங்களை நம்புங்கள்’ உயிருக்குப் பயந்து நடுங்கினார்கள் மருத்துவப் பெண்கள்.

‘சரி நீங்கள் போகலாம். இனிமேல் உங்களை நம்பிப் பயனில்லை நானே நேரடியாக மக்களுக்கு ஆணையிடுகிறேன்’. என்று கூறி மன்னன் புதிய ஆணை ஒன்றை அறிவித்தான்.

‘அடிமைகளுக்குப் பிறக்கும் எந்த ஆண்குழந்தையும் வாழக் கூடாது. அவர்கள் நைல் நதியில் எறிந்து கொல்லப்பட வேண்டும். பெண் குழந்தைகள் வாழட்டும்’

இஸ்ரயேல் குலத்துப் பெண்களும் ஆண்களும் இந்த அறிவிப்பினால் கதிகலங்கிப் போனார்கள். ஆனாலும் மன்னனின் கட்டளைக்கு மறுப்பு ஏது ?  அடிமைகள் மன்னனின் கட்டளையை நிறைவேற்றத் துவங்கினார்கள். அதன் பின் பிறந்த ஆண் குழந்தைகள் எல்லோரும் நைல் நதியில் வீசப்பட்டார்கள். பத்து   மாதம் சுமந்து கனவுகளோடு பெற்றெடுத்த குழந்தைகளை அவர்கள் ஒப்பாரியோடு ஆற்றில் வீசியதால், பிரசவ வீடுகள் எல்லாம் ஒப்பாரி ஓயாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. ஏராளமான பிஞ்சு உயிர்களைக் குடித்த அந்த நைல் நதி வழக்கம் போல மெளனமாய் ஓடிக் கொண்டிருந்தது.

அந்நாட்களில், ஒரு அடிமைத் தம்பதியினர் பிரசவ நாளுக்காகக் காத்திருந்தனர். ‘கடவுளே… எங்களைக் கைவிடாதிரும். எங்களுக்கு ஆண்குழந்தை வேண்டாம். ஒரு பெண் குழந்தையைத் தாரும்’ என கண்ணீரோடு வேண்டிக் கொண்டிருந்தனர்.

நாட்கள் நெருங்கிக் கொண்டே இருந்தன. அவர்களிடம் பதட்டமும் அதிகரித்துக் கொண்டே வந்தது.

பிரசவ நாளும் வந்தது. அவளுக்குப் ஒரு அழகான குழந்தை பிறந்தது. அவசர அவசரமாக குழந்தையைப் பார்த்த தம்பதியினர் அதிர்ந்து போயினர். அது ஒரு ஆண் குழந்தை.

‘ஐயோ.. என்ன செய்வேன். தவமிருந்து பெற்ற மகனை நான் நைல் நதிக்குத் தின்னத் தருவதா ? தண்ணீரில் வீசவா தங்கத்தை நான் பெற்றெடுத்தேன் ‘ என்று அழுது புலம்பினர். ஆனாலும் குழந்தை பிறந்த செய்தியை அவர்கள் யாருக்கும் சொல்லவில்லை.

குழந்தை ரகசிய அறையில் வளர்க்கப் பட்டான். நாட்கள், வாரங்களாகி, வாரங்கள் மாதங்களானது. மூன்று மாதம் முடிவடைந்தது.

எத்தனை நாள் தான் ஒரு குழந்தையை மறைத்து வைக்க முடியும் ?. எந்த நேரமும் எகிப்திய அதிகாரிகளால் தங்கள் வீட்டுக் கதவு தட்டப் படலாம். தங்கள் குழந்தையின் தலை வெட்டப் படலாம் என்னும் பயம் அவர்களைக் கொன்று கொண்டிருந்தது. இறுதியாக ஒரு முடிவு எடுத்தனர்.

‘ஆண்டவரே… இது நீர் எங்களுக்குத் தந்த மகன். இவனை நாங்கள் நைல் நதியில் மிதக்க விடுவோம். நீர் தான் இவனைக் காத்துக் கொள்ள வேண்டும்’ என உருக்கமாக மன்றாடினர். பின் தண்ணீர் நுழையாத ஒரு பேழையைச் செய்து அதற்குள் குழந்தையை வைத்து மூடி நைல் நதியில் மிதக்க விட்டனர்.

நைல் நதி ஒரு அடிமையின் குழந்தையைச் சுமந்து கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது. நைல் நதியின் நாணல்களிடையே அந்தப் பேழை மெல்ல மெல்ல நுழைந்து பயணித்துக் கொண்டிருந்தது. என்ன நடக்குமோ என்னும் அச்சத்தில் தூரமாய் நின்று கவனித்துக் கொண்டிருந்தாள் அந்தக் குழந்தையின் அக்கா.

பேழை நகர்ந்து நகர்ந்து மன்னனின் மகள் குளிக்கும் இடத்திற்கு வந்தது. மன்னனின் மகளும் தோழிகளும் நீராடிக் கொண்டிருக்கையில் அது அவர்களுக்கு அருகே மிதந்து வந்தது. இதைத் தூரத்திலிருந்து பார்த்த சகோதரி திகைத்துப் போனாள். ‘ஐயோ… யாரிடம் சேரக் கூடாது என்று நினைத்தோமோ அவர்களிடமே சென்று சேர்ந்து விட்டதே. என் சகோதரனும் நைல் நதிக்குள் எறியப்படுவானே’ என அழுதாள். ஆனால் நடந்ததோ வேறு !

மன்னனின் ஹ்மகளை அந்தக் குழந்தையின் கொள்ளை அழகு கட்டிப் போட்டு விட்டது. ‘இந்தக் குழந்தையை நான் வளர்ப்பேன்’ என்றாள்.

‘அதெப்படி முடியும் ? இது எபிரேயக் குழந்தையாயிற்றே. அடிமையின் மகனல்லவா ? இவன் சாகவேண்டும் என்பது தானே மன்னனின் ஆணை’ தோழியர் பயந்தனர்.

‘ஆணையிட்டது என் தந்தை தானே. அவருக்குத் தெரியாமலேயே வளர்ப்போம். நீங்கள் இதைப்பற்றி யாரிடமும் மூச்சு விடக் கூடாது’

‘சொல்கிறோம் என்று கோபித்துக் கொள்ளாதீர்கள். இவனை எப்படி வளர்ப்பீர்கள் ? பாலூட்டி வளர்க்க ஒரு தாய் வேண்டுமே ..’

‘நீங்கள் போய் குழந்தையை இழந்த ஒரு எபிரேயப் பெண்ணை அழைத்து வாருங்கள். அவள் இவனை வளர்க்கட்டும். குழந்தை வளர்ந்தபின் அவளுக்குக் கொடுக்க வேண்டிய கூலியைக் கொடுத்து விட்டு இவனை நான் பெற்றுக் கொள்வேன். சரிதானே ?’ மன்னனின் மகள் கேட்டாள்.

தோழியர் அரைமனதோடு ஒத்துக் கொண்டனர். இதை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த குழந்தையின் சகோதரி தோழியர் முன் ஒன்றும் அறியாதவளாக வந்து நின்றாள்.

தோழியர் அவளிடம், ‘ நீ போய் ஒரு எபிரேயச் செவிலியை அழைத்து வா. ஒரு குழந்தையை வளர்க்க வேண்டும். நல்ல கூலி கொடுக்கலாம் என்று சொல்லி அழைத்து வா’ என்றனர்.

அவள் ஆனந்தமாய் ஓடிப் போய் தன் தாயை அழைத்து வந்தாள். குழந்தையை வளர்க்க வாய்ப்புக் கிடைத்த சொந்தத் தாய் மகிழ்ந்தாள். தன் சொந்த மகனுக்குச் செவிலியானாள்.

குழந்தை வளர்ந்தான். தாய் அவனை அரண்மனையில் மன்னனின் மகளிடம் ஒப்படைத்தாள். பையனைப் பார்த்த இளவரசி மகிழ்ந்தாள். நதியிலிருந்து அவனை எடுத்திருந்ததால் அவள் அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள். மோசே என்றால் ‘எடுக்கப் பட்டவன்’ என்று பொருள்.

இந்த மோசே தான் அரசனை எதிர்ப்பான் என்றும், அடிமைகளை விடுதலை செய்ய வைத்து எகிப்தை விட்டு வெளியே கூட்டிச் செல்வான் என்றும் அவள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

எபிரேய குலத்தில் பிறந்த மோசே எகிப்தியர்களின் மாளிகையில் வளர்ந்தான். அவன் அடிமை இனத்தைச் சேர்ந்தவன் என்பது எகிப்தியர்களுக்குத் தெரியாது. ஆனால் தான் அடிமையாய் இருக்கும் எபிரேய குலத்தைச் சேர்ந்தவன் என்பதும், ஆளும் எகிப்திய குலத்தைச் சேர்ந்தவன் அல்ல என்பதும் மோசேக்குத் தெரிந்தே இருந்தது.

சிறுவன் மோசே வளர்ந்து இளைஞனானான். பார்வைக்கு மிகவும் கம்பீரமாக இருந்த அவனை அரச குலப் பெண்கள் எல்லோரும் காதல் கண்ணோடு பார்த்தார்கள்.

ஒருநாள் மோசே அரசகுல ஆண்களுக்கே உரிய கம்பீரத்தில் நகர்வலம் வந்தார். அவருடைய முதல் நகர்வலம் ! . அரச ஆடைகள் அணிந்து, சாரட் வண்டியில் பவனி வந்தபோது தான் அவருக்கு இதுவரை தெரிந்திராத தன் இன மக்களின் அடிமை நிலை தெரிய வந்தது. எகிப்திய அதிகாரிகள் எபிரேயர்களை அடித்துத் துன்புறுத்தி வேலை வாங்கிக் கொண்டிருந்தார்கள். எழுந்து நடக்கவே இயலாத மூதாட்டிகளும், வயதானவர்களும் கூட கடுமையான வேலைகள் செய்து கொண்டிருப்பதைக் கண்ட மோசே மிகவும் வருந்தினார். தன் இன மக்கள் அடி வாங்கி அடிமைகளாய்க் கிடக்கிறார்களே என பரிதவித்தார். இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்னும் எண்ணம் அவர் மனதில் எழுந்தது.

சற்று தூரம் சென்றபோது ஒரு எபிரேயனை எகிப்திய அதிகாரி மூர்க்கமாக அடித்துக் கொண்டிருந்தான். அந்த அடிமையோ எழ முயன்று எழ முயன்று முடியாமல் கிடந்தான். இருந்தாலும் அந்த எகிப்தியன் அடிப்பதை நிறுத்தவில்லை. இதைக் கண்ட மோசே மிகுந்த ஆவேசம் கொண்டார். வண்டியிலிருந்து இறங்கி நேராக அவனிடம் சென்றார்.

‘ஏன் அவனை தொடர்ந்து அடிக்கிறாய் ? அவன் தான் வலிமையில்லாமல் விழுந்து கிடக்கிறானே ? உனக்கு மனசாட்சியே இல்லையா ?’

‘அடிமைகளை இப்படித் தான் நடத்த வேண்டும். பல்லக்கிலா ஏற்றிச் சுமக்க முடியும் ‘ எகிப்தியன் சொல்லி முடிக்கும் முன் மோசேயின் கரம் அவனுடைய கழுத்தை நெரித்தது.

‘நீயெல்லாம் வலி என்றால் என்னவென்றே அறியாதவன். இதோ இப்போது அறிந்து கொள் ‘ என்று அவனுடைய கழுத்தை நெரித்தார்.
அந்த எகிப்தியன் மோசேயின் வலிமையான கரங்களுக்குள் நசுங்கி இறந்தே போனான் !.

மோசே சுற்றும் முற்றும் பார்த்தார். நல்லவேளை யாரும் கவனிக்கவில்லை. இறந்து போன எகிப்திய அதிகாரியை அங்கேயே மண்ணில் புதைத்து விட்டு எந்தவிதமான குற்ற உணர்வும் இன்றி அரண்மனைக்குத் திரும்பினார்.

மறு நாளும் தன்னுடைய மக்களின் நிலையைப் பார்ப்பதற்காக மோசே நகர்வலம் வந்தார். அப்போது இரண்டு இஸ்ரயேலர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். மோசே ஆச்சரியப் பட்டார். எகிப்தியர்கள் தான் இஸ்ரயேலர்களை அடிக்கிறார்கள் என்றால், இங்கே இரண்டு இஸ்ரயேலர்களே தங்களுக்குள் சண்டையிடுகிறார்களே ? என்று வருந்தினார். நேராக அவர்களிடம் சென்றார்.

‘உங்களுக்கென்ன பைத்தியமா ? எகிப்தியர்கள் தான் உங்களை அடிக்கிறார்கள், துன்புறுத்துகிறார்கள் என்றால், நீங்கள் ஏன் உங்களுக்குள் அடித்துக் கொள்கிறீர்கள் ? நீங்கள் ஒற்றுமையாய் இருப்பது தானே உங்களுக்கு நல்லது ?’ என்றார்.

 ’ நீ… யார் அதைக் கேட்க ?…’ என்றனர் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள்.

‘உங்கள் நன்மைக்காகத் தான் சொல்கிறேன். ஒன்றுபட்டு இருந்தால் தான் உங்களால் அமைதியான வாழ்க்கை வாழவும் முடியும், கொடுமைகளை எதிர்க்கவும் முடியும். இல்லையேல் இந்த அடிமை நிலையில் காலம் முழுதும் இருக்க வேண்டியது தான்’

‘நீ உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ. நேற்று ஒரு எகிப்தியனை அடித்துக் கொன்று யாருக்கும் தெரியாமல் மண்ணில் புதைத்து விட்டாயல்லவா… அதே போல எங்களையும் கொன்று புதைத்து விடலாம் என திட்டமிடுகிறாயா’ அவர்கள் கத்தினர்.

மோசே திடுக்கிட்டார். சுற்றுமுற்றும் பார்த்தார். சுற்றிலும் எகிப்திய அதிகாரிகள் நிறைந்திருந்தனர். மன்னன் காதுக்கு விரைவில் இந்த செய்தி எட்டிவிடும் என்பது அவருக்குப் சட்டெனப் புரிந்தது. உதவி செய்யப் போய்ப் பெரும் இக்கட்டில் மாட்டியதை உணர்ந்தார். அவர் நினைத்தது போலவே, உடனே விஷயம் மன்னன் காதுக்குப் போயிற்று.

‘ அதெப்படி ஒரு எகிப்தியன் இன்னொரு எகிப்தியனைக் கொல்லமுடியும். அதுவும் ஒரு அடிமைக்காக ? என்ன சொல்கிறீர்கள். நம்ப முடியவில்லையே’ மன்னன் கொதித்தான்.

‘மன்னா… அவன் உண்மையில் எகிப்தியன் இல்லையாம். அவன் எபிரேய அடிமையாம். உங்கள் மகள் தான் அவனை வளர்த்ததாக அரண்மனையில் பேசிக் கொள்கிறார்கள்’ ஒரு அதிகாரி மெல்லிய குரலில் பேசினார்.

‘என்ன… அவன் அடிமையா ? அரண்மனை இத்தனை காலம் ஒரு அடிமை மகனையா அரசனைப் போல நடத்தியது ? இது அரச குலத்துக்கே அவமானம்.  அவனை உடனே கொன்று விடுங்கள். ‘ மன்னனின் கோபம் பலமடங்கு உயர்ந்தது.

அதற்குள் மோசே உயிர் பிழைக்க ஓடிவிட்டிருந்தார். எகிப்தை விட்டே வெளியேறி மிதியான் என்னும் நாட்டில் குடியேறினார். சிலகாலம் அங்கு தங்கியிருந்த அவர், அங்கு வாழ்ந்து வந்த ஒரு அர்ச்சகரின் மகளை மணமுடித்தார். வருடங்கள் ஓடின. மோசே தன் இன மக்கள் எகிப்தில் அடிமையாய்க் கிடப்பதை மறந்தார். தன் மனைவியோடும், குடும்பத்தினரோடும் மகிழ்ச்சியாக வாழ்ந்து அவந்தார். அவருடைய மாமனாருக்கு ஏராளமான ஆடுகள் இருந்தன. அதை மேய்ப்பதையே மோசே தொழிலாகக் கொண்டார்.

எகிப்தில் மோசேவைக் கொல்லத் தேடிய மன்னன் இறந்து விட்டான். அத்துடன் அவனைக் கொல்லவேண்டும் என்னும் அரச ஆணையும் மறைந்து விட்டது. ஆனால் இஸ்ரயேலர்களின் அடிமைத்தனம் மட்டும் மாறவேயில்லை. அவர்களுடைய சுமை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவர்கள் கடவுளிடம் தங்கள் குறைகளைக் கூறி அழுது கொண்டே இருந்தார்கள். கடவுள் அவர்களைக் காப்பாற்ற முடிவெடுத்தார்.

ஒரு நாள் மோசே ஓரேபை மலைப்பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு சற்றுத் தொலைவில் இருந்த ஒரு பச்சைப் புதர் பற்றி எரியத் துவங்கியது. மோசே திடுக்கிட்டார். இதென்ன இந்த பச்சைச் செடி எப்படி திடீரெனத் தீப்பிடித்தது ? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று எண்ணியவராக புதரை உற்றுப் பார்த்தார். பச்சைப் புதர் எரிந்து கொண்டே இருந்தது. ஆனால் கருகவில்லை. அதைக் கண்ட மோசே மிகவும் ஆச்சரியமடைந்தார். புதரை நோக்கி நடந்தார்.

‘நில்… மோசே…. நில்….’ எரிந்து கொண்டிருந்த புதரிலிருந்து ஆண்டவரின் குரல் ஒலித்தது.

மோசே உச்சி முதல் பாதம் வரை சில்லிட்டார். நடுங்கினார்.

‘நீ.. உன்னுடைய செருப்பைக் கழற்றிப் போட்டுவிட்டு அருகே வா. இது கடவுளின் இடம். புனிதமான இடம். இதை நீ அசுத்தப் படுத்தாதே…’
மோசே பயந்தவராய், தன்னுடைய மிதியடிகளைக் கழற்றி எறிந்து விட்டு நெருப்பை நெருங்கினார்.

‘எகிப்தில் என்னுடைய மக்கள் அடிமையாய்க் கிடக்கிறார்கள். நீ போய் அவர்களை விடுவிக்க வேண்டும். எகிப்தின் செல்வங்களோடு இஸ்ரயேல் மக்கள் அனைவரும் வெளியேற வேண்டும். அவர்களை நீ தான் எகிப்தை விட்டு பாலும், தேனும் பொழியும் சுதந்திர தேசமான கானான் தேசத்துக்குக் கூட்டி வர வேண்டும். உன்னோடு நான் இருந்து உனக்குத் தேவையான உதவிகளைச் செய்வேன்’ கடவுள் சொன்னார்.

‘ஐயோ நானா… கடவுளே… என்னால் முடியாது. எனக்கு எந்தத் திறமையும் இல்லை ‘ மோசே மறுத்தார்.

‘இல்லை. இதைச் செய்வதற்கு சரியான ஆள் நீ தான். நீ… எபிரேயப் பெரியவர்கள் சிலரைக் கூட்டிக் கொண்டு எகிப்திய மன்னனின் அரண்மனைக்குப் போ. அங்கு போய் மன்னனிடம், கடவுள் தான் என்னை உன்னிடம் அனுப்பினார்.. நீ அடிமையாய் வைத்திருக்கும் எபிரேயர்கள் கடவுளுக்கு ஒரு பலி செலுத்த விரும்புகிறார்கள். அதற்காக அவர்கள் எகிப்தை விட்டு வெளியேறி பாலை நிலத்தில் கடவுளுக்குப் பலிசெலுத்தட்டும் என்று சொல்’  என்றார் கடவுள்

‘ஐயோ ஆண்டவரே… இது எப்படி முடியும். எபிரேயப் பெரியவர்களிடம் நான் போய் கடவுள் அனுப்பினார் என்றால் எந்தக் கடவுள் என்று கேட்பார்கள். யாரும் நம்பப் போவதில்லை. நான் என்ன சொல்வது’

‘இருக்கிறவர் நானே… என்பதே கடவுளின் பெயர்’ எனச் சொல்.

‘ஆண்டவரே… நான் சென்றால் என்னை எகிப்திய மன்னன் கொன்று விடுவானே’ மோசே அஞ்சினார்.

‘எகிப்தில் உன்னைக் கொல்லச் சட்டம் இயற்றியவன் இறந்து விட்டான். எனவே நீ அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவேண்டாம்.  அங்கே உனக்கு எந்த ஆபத்தும் வராமல் நான் பார்த்துக் கொள்வேன். நீ போய் நான் சொன்னதைச் செய்’ கடவுள் சொன்னார்.

‘கடவுளே… என்னை யாரும் நம்ப மாட்டார்கள். என்னை எல்லோரும் பைத்தியக்காரனாய்ப் பார்ப்பார்கள்’

‘ மோசே !  உன் கையில் வைத்திருக்கிறாயே ஒரு கைத்தடி… அதைக் கீழே போடு’ என்றார் கடவுள். மோசே அதைக் கீழே போட்டார் உடனே அது ஒரு படமெடுத்தாடும் பாம்பாக மாறியது. மோசே பயந்து போய் பின் வாங்கினார்.
‘பயப்படாதே… அதன் வாலைப் பிடித்துத் தூக்கு’ கடவுள் ஆணையிட்டார். மோசே அதன் வாலைப் பிடித்துத் தூக்க அது மீண்டும் கைத்தடியாக மாறியது.

‘மோசே… இப்போது உன் கையை மடிக்குள்  விட்டு வெளியே எடு’ கடவுள் கூற, மோசே அப்படியே கையை உள்ளே விட்டு வெளியே எடுத்தார். அவருடைய கை தொழுநோயாளியின் கையாய் மாறியிருந்தது. மோசே திகைத்தார்.
‘கவலைப்படாதே மோசே… உன்னுடைய கையை மீண்டும் உன் மடிக்குள் போட்டு வெளியே எடு’ கடவுள் கூறினார். மோசே அப்படியே செய்தான், இப்போது அவருடைய கை சாதாரண நிலைக்கு வந்திருந்தது.

‘நீ எகிப்திற்குப் போய் உன்னை நம்ப மறுப்பவர்களிடம் இதைக் காண்பி அவர்கள் நம்புவார்கள்’ என்றார் கடவுள்.

‘ஐயோ… கடவுளே… இதெல்லாம் மந்திர தந்திரம் என்று சொல்லி என்னை நம்ப மறுப்பார்கள்… என்னை விட்டு விடுங்கள்’ மோசே தப்பிக்கும் வழி தேடினார்.

‘இவற்றைப் பார்த்தும் அவர்கள் நம்பாவிடில், நீ நைல் நதியின் தண்ணீரை கொஞ்சம் அள்ளி தரையில் ஊற்று அது இரத்தமாக மாறும்’ என்றார்,

‘ஐயோ… ஆண்டவரே…  எனக்குப் பேசவே தெரியாது. சபையில் நிற்கும் துணிச்சலும் எனக்கு இல்லை. வேறுயாரையாவது அனுப்புங்கள்’ மோசே விண்ணப்பித்தான்.

மோசே தொடர்ந்து மறுப்பதைக் கண்ட கடவுளுக்குக் கோபம் வந்தது. ‘உனக்கு வாயைக் கொடுத்தவனே நான் தான். என்னிடம் நீ பேச்சைப் பற்றி பேசுகிறாயா. கடவுளிடமே நீ மறுத்துப் பேசுகிறாயா ? சரி… உனக்குக் கூட்டாளியாக ஆரோனை அழைத்துப் போ’ என்றார்.

கடவுள் இவற்றைச் சொன்னதும், எரிந்து கொண்டிருந்த தீ சட்டென அணைந்து போயிற்று. மோசே ஏதும் புரியாதவராய் திரும்பிப் பார்க்க அவரை நோக்கி ஆரோன் வந்து கொண்டிருந்தார்.

மோசே வியந்தார். கடவுள் சொன்னதெல்லாம் உண்மையே என்பதைப் புரிந்து கொண்டார்.

மோசேயும், ஆரோனும் கடவுளுடைய கட்டளையை நிறைவேற்றுவதற்காக எகிப்திற்குச் சென்றார்கள். எகிப்தைச் சென்றடைந்து அங்கிருந்த எபிரேய மக்களைச் சந்தித்து கடவுள் சொன்னதையெல்லாம் சொன்னார். மக்களோ நம்பவில்லை. ‘ இதெல்லாம் சுத்த உளறல். கடவுளாவது பேசுவதாவது ‘ என்று சிரித்தனர். மோசே கலங்கவில்லை. கடவுள் சொன்ன அனைத்து அற்புதங்களையும் அவர்கள் முன்னே செய்து காட்டினார். தன்னுடைய வாக்கு சாதுர்யத்தால் ஆரோன் ஆண்டவரின் திட்டத்தைத் தெளிவாகச் சொன்னார். மக்கள் நம்பினார்கள்.

மோசே சில பெரியவர்களையும் அழைத்துக் கொண்டு மன்னனின் முன் வந்து நின்றான்.

‘மன்னா.. நான் மோசே வந்திருக்கிறேன். கடவுள் இஸ்ரயேலரை விடுதலை செய்யச் சொன்னார். அவர்களை விட்டு விடு. அவர்கள் பாலை நிலத்தில் கடவுளுக்குப் பலி செலுத்த வேண்டுமென்பது எங்கள் கடவுளின் கட்டளை ‘ என்றார்.

மன்னன் உரக்கச் சிரித்தான். ‘ஆஹா… எவ்வளவு எளிதாகச் சொல்லி விட்டாய் ? எல்லோரையும் விடுவிப்பதா ?’ என்று சொல்லி மீண்டும் சிரித்தான்

‘மன்னா… இது கடவுளின் கட்டளை. இதை நீ நிறைவேற்றியே ஆகவேண்டும்’ மோசே துணிவும் கம்பீரமும் நிறைந்தவராய் பேசினார்.

‘யார் உன் கடவுள். அவரை எனக்குத் தெரியாதே. அவர் சொல்வதை நான் ஏன் கேட்கவேண்டும் ? எனக்குத் தான் வேறு கடவுள் இருக்கிறாரே ‘ மன்னன் மீண்டும் சிரித்தான்

‘கடவுளைப் பழித்துப் பேசாதே. அரசனாய் இருக்கிறோம் என்னும் ஆணவத்தில் பேசாதே. கடவுளின் வார்த்தைக்குக் கட்டுப்படு’

‘கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு விட்டு கட்டுப்படு என்று கட்டளையிடுகிறாயா ?’ மன்னன் கோபமானான்.

‘கட்டுக் கதையா ! இதோ பார்…’  மோசே தன் கையிலிருந்த கோலை தரையில் போட்டார். அது சீறும் பாம்பாக மாறியது.

‘ஓ… இதுதான் உன் கடவுளின் செயலா ? உன் கடவுள் வெறும் மந்திரவாதியா ? இதே போல் செய்து காட்ட என்னிடம் ஏராளமான மந்திரவாதிகளும், கண்கட்டு வித்தைக்காரர்களும், சூனியக்காரிகளும் உண்டு… பார்க்கிறாயா ?’ மன்னன் ஏளனமாகக் கூறிக்கொண்டே அருகிலிருந்த அரசவை மந்திரவாதிகளைப் பார்த்தான்.

மந்திரவாதிகள் தங்கள் கைகளில் இருந்த மந்திரக் கோல்களைத் தரையில் போட்டார்கள். அவை பாம்புகளாக மாறின. ஆனால் மோசே யின் பாம்பு அந்த பாம்புகளையெல்லாம் விழுங்கி விட்டது.

மன்னனுக்குக் கோபம் வந்தது. ஒரு அடிமை மகன் அரசவையில் வைத்துத் தன்னை அவமானப் படுத்தி விட்டானே என்று கடுங்கோபமடைந்தான்.

‘ மோசே… ஆரோன்…. உங்களுக்கு வேறு வேலையே இல்லையா ? ஒழுங்காக வேலை செய்து கொண்டிருக்கும் இஸ்ரயேல் மக்களின் மனதை நீ கெடுக்கிறாய். உன்னுடைய செயல்களினால் பாதிக்கப் படப் போவது யார் தெரியுமா ? உன் இன மக்கள் தான்.’ மன்னன் அதட்டினான்.

‘கடவுளின் முன்னிலையில் இருக்கும் எங்களுக்கு எந்தப் பாதிப்பையும் எவனும் தந்து விட முடியாது’ மோசே பதில் கூறினார்.

‘ஓஹோ… கடவுள் !!! பார்க்கலாமா ? இன்று முதல் அடிமைகளுக்கு செங்கல் அறுப்பதற்காக வழங்கப் பட்டுக் கொண்டிருந்த வைக்கோல் கொடுக்கப் பட மாட்டாது. அவர்களே வைக்கோலைத் தேடிச் சேகரிக்க வேண்டும். ஆனால் , இன்றுவரை அவர்கள் அறுத்துக் கொண்டிருந்த செங்கற்களில் ஒன்று கூட குறையக் கூடாது. இது அரச கட்டளை’ என்றான் மன்னன்.

இதைக்கேட்ட மோசே வருந்தினார். இஸ்ரயேலர்களோ மோசேயின் மேல் கடும் கோபம் கொண்டனர்.

‘இதற்குத் தான் உன்னுடைய கடவுளையும் அழைத்துக் கொண்டு இங்கே வந்தாயா ? வைக்கோல் கிடைக்கும் போதே குறிப்பிட்ட செங்கற்களை அறுத்துக் கொடுக்க நா ங்கள் இரவு பகலாக உழைக்க வேண்டியிருக்கிறது. இப்போது நீ வந்து எங்கள் வேலையை இரட்டிப்பாக்கி விட்டாய்’

‘உன் கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டே, எங்கள் மனதையும் கலைத்து விட்டாயே’

‘எங்களைக் கொல்வதற்கான வாளை எடுத்துக் கூர் தீட்டி மன்னனின் கையில் கொடுத்தது போல் ஆயிற்றே. இதுவரை கிடைத்து வந்த கொஞ்ச நஞ்ச சலுகைகள் கூட இனிமேல் கிடைக்காதே’

இஸ்ரயேலர்கள் மோசேயை வசை மொழிகளால் தாக்கினார்கள். மோசே வருந்தவில்லை. எபிரேயர்களை மீட்டுச் செல்வது என்னும் கடவுளின் கட்டளையில் உறுதியாக இருந்தார்.

மறுநாள் மன்னன் நைல் நதிக் கரையோரம் நீராட வருகையில் மோசே அவர் முன் நின்றார்.
‘மன்னா.. மீண்டும் சொல்கிறேன். கடவுளின் கட்டளையை மீறாதே… மக்களைப் போகவிடு’ என்றார்.

‘இல்லாவிட்டால் நீ என்ன செய்வாய் ? வேறு ஏதாவது வித்தை கைவசம் இருந்தால் செய்து காட்டேன். பொழுது போகும் ‘ மன்னன்  சிரித்தான்.

மோசே தன்னிடமிருந்த கோலை எடுத்து நைல் நதியை அடித்தார். நைல் நதியில் ஓடிக் கொண்டிருந்த தண்ணீர் முழுதும் இரத்தமாக மாறியது. நதியிலிருந்து தொட்டிகளில் சேமித்து வைக்கப் பட்டிருந்த தண்ணீரும் இரத்தமாக மாறிற்று. நதி இரத்தமாக மாறியதால் அதிலிருந்த மீன்கள் எல்லாம் மூச்சு விட முடியாமல் மடியத் துவங்கின.

மன்னனுக்கு அருகில் நின்றிருந்த மந்திரவாதி ஒருவன் ஒரு குவளை நல்ல நீரை எடுத்து மந்திரம் கூறி நிலத்தில் ஊற்ற அதுவும் இரத்தமாக மாறியது.
‘மோசே… ஏதாவது புதிய வித்தை கண்டு பிடி. உன்னுடைய வித்தைகளெல்லாம் ஏற்கனவே என்னுடைய மந்திரவாதிகளுக்குத் தெரிந்தது தான் !’ மன்னன் நகைத்தான்.

ஏழு நாட்கள் எகிப்து முழுவதும் இரத்தத்தாலும், செத்த மீன்களின் நாற்றத்தாலும் நிறைந்திருக்கையில் மோசே மீண்டும் மன்னன் முன்னிலையில் வந்து நின்றார்.

‘இஸ்ரயேல் மக்களைப் போகவிடு. இல்லையேல் கடவுள் உன்னுடைய நகரை முழுதும் தவளைகளால் தாக்கப் போகிறார்’ மோசே எச்சரித்தார்.

‘ஓ… மன்னனுக்கு எதிராகத் தவளைகளா ? உன் கடவுள் தவளை வினியோகிப்பவரா… நடக்கட்டும் நடக்கட்டும்’ என்று மன்னன் இளக்காரமாய்க் கூறினான்.

மறுநாள் காலையில் நகர் முழுதும் தவளைகளால் நிறைந்தது. குளங்கள், ஏரிகள், கிணறுகள் எங்கும் தவளைகள் நிறைந்தன. அவை கூட்டம் கூட்டமாக வெளியேறி சாலைகளிலும் மக்களின் வீடுகள் சமையலறைகள், உணவுகள் , படுக்கையறைகள் எங்கும் நிறைந்தன. மக்களின் வாழ்க்கை ஸ்தம்பித்தது. மன்னன் மோசேயை அழைத்தான்.

‘இந்த தவளைகள் நகரை அழிக்கின்றன. அவற்றை இல்லாமல் செய்து விடு. இல்லையேல் நீ பெரும் அழிவுக்கு உள்ளாவாய்’ மன்னன் சினந்தான்.

‘இது கடவுளின் சித்தம். நான் எதுவும் செய்ய இயலாது. நீ இஸ்ரயேலர்களைப் போக அனுமதிப்பாய் என்றால், நான் கடவுளிடம் மன்றாடி தவளைகளை ஒழிக்கிறேன்’ மோசே தெளிவாகச் சொன்னார்.

‘ சரி…  நீ தவளைகளை அழித்து விடு. நான் உன் மக்களைப் போக விடுகிறேன்’ மன்னன் சொன்னான்.

மோசே ஆண்டவரிடம் மன்றாட, தவளைகள் எல்லாம் செத்து மடிந்தன. அவை நகரம் முழுவதும் பெரிய மலைகள் போல குவியல் குவியலாகச் கூட்டிச் சேர்க்கப் பட்டு அழிக்கப் பட்டன. தவளைகளின் தொல்லை ஒழிந்ததைக் கண்ட மன்னன் மகிழ்ந்தான். தான் சொன்ன வாக்கிலிருந்து பின் வாங்கினான். அடிமைகளைப் போகவிடவில்லை.

மோசே மன்னனிடம். ‘ நீ .. கடவுளின் ஆணையை மீறிவிட்டாய். இனி நடக்கப் போவதைப் பார்..’ என்று சொல்லிக் கொண்டே தன் கையிலிருந்த கோலை எடுத்து புழுதி நிறைந்திருந்த தரையில் அடித்தார். உடனே நகர் முழுதும் கொசுக்களால் நிறைந்தது. அவை மக்களின் மேலும் கால்நடைகளின் மேலும் அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சத் துவங்கின. மக்கள் பெரும் அவஸ்தைப் பட்டார்கள்.

மன்னன் மந்திரவாதிகளை அழைத்தான்.
‘ம்… நீங்கள் இதேபோல கொசுக்களை உருவாக்குங்கள்’

மந்திரவாதிகள் எவ்வளவோ முயன்றும் அவர்களால் கொசுக்களை உருவாக்க முடியவில்லை. ‘மன்னா இது கடவுளின் செயல் தான் எங்களால் கொசுக்களை உருவாக்க முடியவில்லை’ என்றனர் மந்திரவாதிகள்.

‘அதெப்படி இது கடவுளின் செயலாகும் ? இது கடவுளின் செயல் என்றால் ஏன் எபிரேய மக்களின் மேலும் கொசுக்கள் கடிக்கின்றன ?, எபிரேயர் வீடுகளில் ஏன் தவளைகள் இருந்தன ? இது உங்கள் கடவுளின் செயல் அல்ல…’ என்றான் மன்னன்.

‘மோசே… நீ… இந்தக் கொசுத்தொல்லையை தீர்த்தால் நீங்கள் உங்கள் கடவுளுக்குப் பலியிடும் சுதந்திரத்தைத் தருவேன். ஆனாலும் இஸ்ரயேலர்கள் எகிப்தை விட்டுச் செல்ல அனுமதி கிடைக்கப் போவதில்லை’ மன்னனின் மனம் இறுகியது.

‘இந்த நாட்டிலே பலியிடுதல் கடவுளின் விருப்பமல்ல. இங்கிருந்து மூன்று நாட்கள் நடந்து பாலை நிலத்தில் தான் நாங்கள் பலியிட வேண்டும்’ மோசே சொன்னார்.

‘அது நடக்கப் போவதில்லை. ‘ மன்னன் எதிர்த்தான்.

‘நீ முரண்டு பிடிப்பது மனிதர்களோடு அல்ல, கடவுளோடு. இனிமேல் நீ காணப் போவது மிகக் கொடுமையானதாய் இருக்கும். நாளைக்கு வண்டுகள் தேசமெங்கும் நிறையும். ஆனால் எந்த எபிரேயனையோ, அவனுடைய வீடு களையோ, கால்நடைகளையோ அவை தாக்காது. இதிலிருந்தாகிலும் நீ கடவுளின் செயலைக் கண்டு கொண்டால்… அது உனக்கு நலம்’ மோசே சொன்னர்.

மறுநாள் நகரெங்கும் வண்டுகள் அட்டகாசம் செய்தன. ஆனால் எபிரேயர்களும், அவர்களின் வீடுகள் கால்நடைகளும் வண்டுகளால் தாக்கப் படவில்லை.
இதைக் கண்ட எகிப்தியர்கள் இது கடவுளின் செயல் தான் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

மன்னன் மோசேயிடம்  ‘சரி… இந்த முறை நான் உங்களைப் போக விடுகிறேன். ஆனால் பாலை நிலத்தில் வெகுதூரம் போய் விடாதீர்கள். அங்கு உங்கள் கடவுளுக்குப் பலியிடும்போது எனக்காகவும் மன்றாடுங்கள்’ என வஞ்சனையாய்ப் பேசினான். கடவுள் வண்டுகளை அழித்தார். மன்னன் மீண்டும் தன் வாக்குறுதியிலிருந்து பின் வாங்கினான்.

‘இனிமேலும் நீ மக்களை போக அனுமதிக்காவிடில் இனிமேல் உன் கால்நடைகள் எல்லாம் கொடிய நோய் வந்து சாகும்’ மோசே எச்சரித்தார்.
அவ்வாறே எகிப்தியரின் கால்நடைகள் எல்லாம் மடிந்தன. அடிமைகளின் கால்நடைகளோ நன்றாக இருந்தன. அவற்றிற்கு ஒன்றும் நேரவில்லை. இதைக் கண்டும் மன்னனின் மனம் மாறவில்லை.

‘மன்னா…. நீ… கடவுளுக்கு எதிராக தொடர்ந்து போராடுகிறாய். நீ அழிவது உறுதி. கடுமையான தண்டனைகள் தான் உன்னைத் திருத்தும். எனவே உன்னுடைய இனத்தினர் மீதெல்லாம் கொப்புளங்கள் தோன்றி அவதிப்படுவீர்கள்’ என்றார் மோசே.

அவ்வாறே எகிப்தியர் அனைவருக்கும் உடலில் கொப்புளங்கள் தோன்றி பயங்கர வலியைக் கொடுத்தன. அதிலிருந்து மன்னனோ, மந்திரவாதிகளோ கூடத் தப்பவில்லை. எகிப்தியர்கள் அனைவரும் கொப்புளங்கள் வந்த உடலினால் பெரிதும் அவதியுற்றனர். மன்னனிடம் சென்று தங்களுக்கு உதவுமாறு வேண்டினர்.
மன்னன் மீண்டும் மறுத்தான். அவனுடைய நெஞ்சம் கடினமாகி இருந்தது.

மோசே மன்னனிடம் ‘நீ… இப்போதும் கூட என்னுடைய மக்களை அனுப்ப இசையாதது உன் அழிவுக்கான நாள் நெருங்கி வருவதையே காட்டுகிறது. நாளை கல்மழை பொழியும் எகிப்து அழியும்’ என்றார்.

அவர் சொன்னபடியே மறுநாள் கல்மழை பொழியத் துவங்கியது. உலகம் இதுவரைச் சந்தித்திராத பெரிய கல்மழை அது. பயங்கரக் கல்மழையானது எகிப்தியரின் எஞ்சியிருந்த கால்நடைகளையும், வீடுகளையும், மரங்களையும் அழித்தது. கல்மழை தரையில் விழுந்தபோது அதிலிருந்து நெருப்பு கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. ஆனால் எபிரேயர்கள் எவரையும் கல்மழை தாக்கவில்லை. மழை விழுந்து நெருப்பு எழுந்திருப்பதைக் கண்டதும் மன்னன் திகிலுற்றான். மழை விழுந்து நெருப்பு அணைவதை மட்டுமே கண்டிருந்த மக்கள், மழை விழுந்து நெருப்பு எழுவதைக் கண்டதும் நடுங்கினர்.

‘மோசே.. நான் இதுவரை செய்ததெல்லாம் தவறுதான். இந்தக் கல்மழையை எப்படியாவது நிறுத்திவிடு. உன் மக்களைப் போக விடுகிறேன். நீங்கள் போய் விரும்பும் இடத்தில் உங்கள் ஆண்டவரைத் தொழுது கொள்ளுங்கள்’ என்றான் மன்னன்.
மோசே கல்மழையை நிறுத்தினார். ஆனால் மன்னனின் கல்நெஞ்சம் மாறவில்லை.

மீண்டும் மோசே மன்னனிடம்,’ எத்தனை காலம் தான் நீ இப்படி ஆண்டவனின் கட்டளைகளை மீறுவாய் ? கடவுளோடு போரிட்டு யாரேனும் வெற்றிபெற முடியுமா ? மூடனே… நாளை வெட்டுக்கிளிகள் உன் நகரை நிறைக்குமே என்ன செய்வாய் ?’ என்றார்.
மறுநாள் வெட்டுக் கிளிகளால் நகரம் நிறைந்தது. தரை காண முடியாத அளவுக்கு வெட்டுக் கிளிகள் எங்கும் நிறைந்தன. அவை பயிர்கள் அனைத்தையும் தின்று தீர்த்தன.

மன்னன் மோசேயிடம்’ வெட்டுக் கிளிகளை நகரை விட்டு அப்புறப் படுத்து. உங்கள் அனுப்புவேன் இது சத்தியம்’ என்றான்.

‘இனிமேலும் வஞ்சனை செய்யாதே … வெட்டுக் கிளிகளை ஒழிக்கிறேன். ஆனால் இப்போதும் நீ வாக்கு மாறினால் நிலமை பன் மடங்கு மோசமாகும்’ என்று கூறிய மோசே வெட்டுக் கிளிகளை ஒழித்தார். அவை கடலில் போய் மறைந்தன.

மன்னன் மோசேயை நோக்கி,’ சரி. இனிமேலும் நான் உன்னுடன் போட்டியிட விரும்பவில்லை. நீங்கள் போய் பலி செலுத்துங்கள். ஆனால் உங்கள் இன ஆண்கள் மட்டும் போய் வழிபாடு நடத்தி விட்டுத் திரும்பி வாருங்கள். பெண்கள், குழந்தைகள், கால்நடைகள் எல்லாம் இங்கேயே இருக்கட்டும்’ என்றான்.

மோசேயோ,’ இல்லை… இது கடவுளுக்கான பலி. ஆண், பெண், குழந்தைகள் என்று பாகுபாடில்லாமல் எல்லோரும் போக வேண்டும். எல்லா செல்வங்களோடும் போக வேண்டும். கால்நடைகளை நாங்கள் பலியிடவேண்டும். எனவே கால்நடைகளும் மிகவும் முக்கியம்’ என்றார்.

மன்னன் வழக்கம் போலவே மறுத்தான்.

மோசே நகருக்குள் இருளை வரவழைத்தார். எகிப்தியர் வாழும் பகுதிகளை காரிருள் மூடியது. அவர்களால் எதையும் பார்க்க முடியவில்லை. கொளுத்தி வைக்கும் தீப்பந்தங்களால் அந்த இருளை விலக்க முடியவில்லை. அருகருகே இருக்கும் இருவர் கூட தங்கள் முகங்களைப் பார்த்துக் கொள்ள முடியவில்லை. மூன்று நாட்களாகியும் இருள் விலகாததைக் கண்ட மன்னன் மோசேயிடம் விண்ணப்பித்தான். ‘ நீங்கள் பலி செலுத்தப் போங்கள். உங்கள் இனப் பெண்கள், குழந்தைகள் கூட வரட்டும். ஆனால் கால்நடைகள் மட்டும் எகிப்திலேயே தங்கட்டும்’ என்றான்.

மோசேவோ,’ இல்லை… பலியிடுவதற்கான பொருட்கள் எங்களுக்கு மிகவும் அவசியம்’ என்றார். மன்னனோ ‘என் நாட்டுச் செல்வங்கள் எகிப்தை விட்டு வெளியேறுவதை எப்படி என்னால் அனுமதிக்க முடியும் ? செல்வங்களை நீங்கள் எடுத்துச் செல்வதை நான் அனுமதிக்கப்போவதில்லை ‘ என்று கூறி மோசேயின் விருப்பத்தை நிராகரித்தான்.

மோசே ஆண்டவரிடம் மன்றாடினார். ‘ கடவுளே .. என்ன செய்து இந்த மக்களை மீட்பது. இந்த மன்னனின் மனதை மாற்ற முடியவில்லையே ?’ என்று மனமுருகி வேண்டினார்.

கடவுள் மோசேயிடம்.’ இனிமேல் அவன் உங்களைப் போக விடுவான். நான் அவனுக்கு மிகப் பெரிய தண்டனை கொடுக்கப் போகிறேன். அது என்ன தெரியுமா ? எகிப்திய இனத்தின் தலைப்பேறான பிள்ளைகளையும், கால் நடைகளையும் கொன்றுவிடுவேன். அதற்குப் பின் அவன் மனம் மாறாமல் இருக்க முடியாது’ என்றார்.

மோசே ஆண்டவரிடம்,’ ஆண்டவரே.. இந்த முறையும் நீர் எபிரேயர்களுக்கு உதவ வேண்டும். அவர்களின் தலையீற்றுகளை அழிக்க வேண்டாம்’ என விண்ணப்பித்தார்.

‘அவர்கள் என் மக்கள் அவர்களை நான அழிக்க மாட்டேன். நான் சொல்வதன் படி நீ செய்’ என கடவுள் மோசேயை அனுப்பினார்.

மோசே இஸ்ரயேலர்களிடம் போய்… ‘இன்று இரவு கடவுள் தலையீற்றுகளை அழிக்கப் போகிறார். அதிலிருந்துத் தப்பிக்க வேண்டுமெனில் நீங்கள் உங்கள் வீட்டுக் கதவில் ஆட்டு இரத்தத்தைப் பூசி வையுங்கள். இரத்தம் பூசப்பட்ட வீடுகள் தப்பும். இரத்தம் பூசப்படாத வீடுகளில் உள்ள தலையீற்றுகள் அழிக்கப் படும்’ என்றார்.

இஸ்ரயேலர்கள் அவ்வாறே செய்தனர். இரவில் கடவுளின் தூதர் நகர் முழுவதும் உலா வந்தார். அப்போது இரத்தம் பூசப்படாதிருந்த எகிப்தியர்களின் குடும்பங்களில் இருந்த தலையீற்றுகள் இறந்து போயின. எபிரேயர்கள் தப்பினர்.

மறுநாள் விடிவதற்குச் சற்று நேரம் இருக்கையில் நகரின் ஒரு ஓரத்தில் அழுகுரல் ஒன்று ஆரம்பமானது. அழுகுரலைக் கேட்டு எழுந்த எபிரேயர்கள், தங்கள் குடும்பத்தில் மூத்தவன் இறந்து போயிருப்பதைக் கண்டு அவர்களும் அழ ஆரம்பித்தனர். இப்படியே சங்கிலித் தொடர் போல அழுகை எகிப்து முழுவதும் பரவியது. சாவு இல்லாத வீடுகளே இல்லாததால், அழுகை பெருஞ் சத்தமாய் எகிப்தை நிறைத்தது. ஆனால் எபிரேயர்களின் வீடுகளில் யாரும் அழியவில்லை.

‘மன்னா…. விஷயம் அறிந்தீர்களா ? எகிப்தில் எல்லா வீடுகளிலும் மரணம் நடந்திருக்கிறது’ தலை தெறிக்க ஓடி வந்து விஷயம் சொன்னான் ஒருவன்.

‘இதெல்லாம் அந்த மோசேயின் வேலை.. அவனை ஒழிக்காமல் விடமாட்டேன்’ மன்னன் உறுமினான்.

‘மன்னா… எகிப்து அழிகிறது. அந்த அடிமை நாய்களை அனுப்பி விடுங்கள். இவர்களால் நாம் பட்ட துன்பம் போதும்’ அதிகாரிகள் விண்ணப்பித்தனர்.

‘அப்படி அனுப்பினால் நான் பயந்து பின் வாங்கியது போல் ஆகாதா ? முடியவே முடியாது’ மன்னன் மறுத்தான்.

‘இப்போது எல்லாத் தலைச்சன் பிள்ளைகளும் இறந்து விட்டார்கள். இனி மிச்சமிருக்கும் மக்களும் இறந்தபின் தான் அடிமைகளை அனுப்புவீர்களா ‘ அதிகாரிகள் ஆவேசப் பட்டனர்.

அப்போது தான் மன்னனுக்கு, தன்னுடைய மகனின் ஞாபகம் வந்தது. ஒரே மகன். தலைச்சன் பிள்ளை ! மன்னன் தன் மகனுடைய அறைக்கு ஓடினான். அதிர்ந்தான் ! அங்கே அவனுடைய ஒரே மகன் படுக்கையில் பிணமாகக் கிடந்தான்.

ஒரே இரவில் நிகழ்ந்த அந்த மாபெரும் துயரச் சம்பவம் மன்னனை மிகவும் பயப்படுத்தியது. இனிமேலும் மோசேயும் அவன் இனத்தினரும் எகிப்தில் இருந்தால் எகிப்து முழுதும் அழிந்துவிடும் என்று மன்னன் அஞ்சினான். தன் உயிரை நினைத்துப் பயப்பட ஆரம்பித்தான்.

உடனே உத்தரவிட்டான். நனூற்று முப்பது ஆண்டுகள் அடிமைகளாய் வாழ்ந்த எகிப்தியரின் உள்ளங்களில் தேனாய்ப் பாய்ந்தது அந்த உத்தரவு. தங்கள் உரிமைகளையெல்லாம் இழந்து  அதிக உழைப்பால் வருந்திக் கொண்டிருந்த மக்களை உற்சாகத்தில் திளைக்கவைத்தது அந்த உத்தரவு. ‘இஸ்ரயேலர்கள் உடனே எகிப்தை விட்டு வெளியேறட்டும்’ என்பதே அது.

சுமார் ஆறுஇலட்சம் அடிமைகள் அளவில்லாத ஆனந்தம் அடைந்தார்கள். அவர்கள் தங்கள் கால்நடைகளையும், சொத்துக்களையும் பயணத்துக்காய் ஆயத்தப் படுத்தினார்கள். பயணத்துக்கு முன் எபிரேயப் பெண்கள் எகிப்தியர்களிடமிருந்து பொன்னும் வெள்ளியும் வாங்கிக் கொண்டார்கள். எபிரேயர்கள் கேட்ட எதையும் எகிப்தியர்கள் மறுக்கவில்லை. காரணம் நாடு முழுவதும் எகிப்தியர்களின் கடவுள் மீதான பயம் நிறைந்திருந்தது.

ஒரு மிகப் பெரிய பேரணியாக அந்த விடுதலையின் பயணம் ஆரம்பமானது. அவர்கள் பாலை நிலம் வழியாக நடந்து கடவுள் கட்டளையிட்டிருந்த கானான் நாட்டிற்குப் போகத் துவங்கினார்கள். எபிரேய மக்கள் திரள் எகிப்தைக் கடந்தனர். கடவுள் அவர்களோடு இருந்தார்,.

இரவு நெருங்கியபோது திடீரென ஒரு நெருப்புத் தூண் அவர்களுக்கு முன்னால் சென்றது. எபிரேயர்கள் கடவுளில் செயலை எண்ணி வியந்தனர். பகலில் பாலை நிலத்தில் வெயில் வந்தபோது அவர்களுக்கு மேல் வானத்தில் ஒரு மிகப் பெரிய மேகம் வந்து அவர்களை வெயிலிலிருந்து பாதுகாத்தது. அவர்கள் நடந்து நடந்து செங்கடலின் கரையில் வந்தார்கள்.

இதற்கிடையில் மன்னனின் காதுகளுக்குச் செய்தி வந்தது.’ மன்னா … கடவுளுக்குப் பலியிட பாலை நிலத்துக்குப் போகிறோம் என்று போன மக்கள் தப்பி ஓடுகிறார்கள். அவர்கள் பாலை நிலத்தைக் கடந்து விட்டார்கள்’

மன்னன் சினந்தான். மகனை இழந்த சோகமும், அடிமைகளை இழந்த கோபமும் எல்லாம் சேர்ந்து அவனை மிகவும் ஆவேசப் பட வைத்தன. அவன் பெரும் படையைத் திரட்டிக் கொண்டு எபிரேயர்களைத் தேடிப் புறப்பட்டான்.

தூரத்தில் செங்கடலின் கரையில் இஸ்ரயேலர்கள் நிற்பதைக் கண்ட மன்னன் வேகமாக படையைச் செலுத்தினான். எகிப்தியப் படை தொலைவில் வருவதைக் கண்ட எபிரேயர்கள் அலறினார்கள்.

‘ஐயோ…. இந்த பாலை நிலத்தில் நாம் சாகப் போவது உறுதி.’

‘பேசாமல் அடிமை வேலை செய்திருந்தால் உயிரையாவது காப்பாற்றியிருக்கலாம்’

‘எங்களைக் கொல்லத்தான் இங்கே கூட்டி வந்தீர்களா ?’
மக்கள் பலவிதமாகப் புலம்பினார்கள்.

மோசே ஆத்திரமடைந்தார்.’ மடையர்களே… இன்னும் எத்தனை நாள் தான் இப்படி நம்பிக்கை இல்லாமல் இருப்பீர்கள். எத்தனையோ அதிசயங்களைக் கண்டீர்களே ? இன்னும் கடவுளை நீங்கள் நம்பவில்லையா ?கடவுள் எல்லோரையும் காப்பார்’ என்று சொல்லிக் கொண்டே தன் கையிலிருந்த கோலை எடுத்து செங்கடலை நோக்கி நீட்டினார்.

உடனே பெரும் காற்று வீசியது. அந்த பெரும் காற்று செங்கடலை இரண்டாகப் பிரித்தது. தண்ணீர் இருபுறமும் வானளாவ நிற்க, தண்ணீருக்கு இடையே கட்டாந்தரை தோன்றியது. இஸ்ரயேலர்கள் அந்த அற்புதக் காட்சியைக் கண்டு மெய்மறந்தார்கள். அனைவரும் கடலுக்குள் இறங்கி ஓடினார்கள். எகிப்தியப் படைகள் நெருங்கிக் கொண்டிருந்தன. திடீரென ஒரு நெருப்பு வேலி எகிப்தியர்களுக்கும் எபிரேயர்களுக்கும் இடையே வந்து நின்றது. எகிப்தியர்கள் அந்த நெருப்பு வேலியைக் கடக்க வெகுநேரமாயிற்று. அதற்குள் எபிரேயர்கள் கடலுக்குள் வெகுதூரம் சென்று விட்டிருந்தனர்.

எல்லா எபிரேயர்களும் மறுகரையை நெருங்கிய நேரத்தில் எகிப்தியப் படைகள் கடலுக்குள் இறங்கி விரைந்தன. இஸ்ரயேலர்கள் மிகவேகமாக மறுகரையை அடைந்தனர். எல்லா எகிப்தியப் படைகளும் இஸ்ரயேலர்களை அழிக்கும் ஆவேசத்தில் நடுக்கடலைத் தாண்டி வண்டிகளில் வேகமாக வந்துகொண்டிருந்தன. அப்போது மோசே தன்னுடைய கையிலிருந்த கோலை மீண்டும் கடல் மீது நீட்டினார். இருபக்கமும் மதில் போல உயர்ந்து நின்றிருந்த கடல் திடீரென ஒன்றுசேர்ந்தது ! பாதை தண்ணீரால் மூழ்கியது.

எகிப்தியப் படைகள் கடலுக்குள் மூழ்கி அழிந்தன. யாருமே தப்பவில்லை. இஸ்ரயேலர்கள் விடுதலையானார்கள். செங்கடலைத் தாண்டி மகிழ்ச்சியோடு தங்கள் விடுதலைப் பயணத்தைத் தொடந்தார்கள். அத்துடன் எகிப்தியர் பற்றிய அச்சுறுத்தல் முடிந்து போயிற்று.

மோசே தனி ஒருவராக மக்களை வழிநடத்திக் கொண்டிருந்தார். அவர்களுடைய பயணம் சுடும் பாலை நிலத்தைக் கடந்து கொண்டிருந்தது. அடிமைகளாய் இருந்த மக்கள் சுதந்திரமாய் நடந்து கொண்டிருப்பதைப் பார்த்த மோசே மிகவும் ஆனந்தப் பட்டார். ஆனால் அந்த ஆனந்தம் நீண்ட நாள் நீடிக்கவில்லை.

சில நாட்களிலேயே மக்கள் மோசேயிடம் மிகப் பெரிய விண்ணப்பம் ஒன்றை வைத்தார்கள். ‘நாங்கள் கொண்டுவந்திருந்த உணவுகள் எல்லாம் தீர்ந்து விட்டன. எங்களுக்கு உணவு வேண்டும்’

‘இந்த பாலை நிலத்தில் உணவுக்கு எங்கே போவது ? உங்களிடம் இருந்த உணவுப் பொருட்கள் எல்லாம் தீர்ந்து விட்டனவா ?’ மோசே கேட்டார்.

‘ ஆம். உணவுகள் எல்லாம் தீர்ந்து விட்டன…’ மக்கள் பதில் சொன்னார்கள்.

‘எகிப்திலே எங்களுக்குப் பட்டினி நிலமை வந்ததே இல்லை. நீர் தான் எங்களை பாலை நிலத்தில் கூட்டி வந்து சாகடிக்கிறீர்.’ மக்கள் மோசேயின் மீது பழி சுமத்தினார்கள்.

‘கவலைப் படாதீர்கள். கடவுளின் அதிசயச் செயல்களை நீங்கள் துவக்கம் முதலே கண்டு வருகிறீர்கள் அல்லவா ? நாளை முதல் மீண்டும் காண்பீர்கள். உங்களுக்கு உண்பதற்கான உணவைக் கடவுள் நாளை கொடுப்பார்’ என்றார் மோசே.

‘அப்படியானால் எங்களுக்கு அப்பம் கிடைக்குமா ?’ மக்கள் கேட்டனர்.

‘கடவுளை நம்புங்கள். உங்களுக்குத் தேவையானது எல்லாம் கிடைக்கும்’ மோசே கூறினார்.

மறுநாள் காலையில் மக்கள் தங்களுடைய கூடாரங்களை விட்டு வெளியே வந்தபோது வெளியே பனி மூடிய நிலையில் ஏதோ ஒரு பொருள் எங்கும் நிறைந்து கிடப்பதைக் கண்டார்கள். மக்கள் அதைக் கைகளில் எடுத்து தங்களுக்குள்ளேயே ‘மன்னா ?’ என கேட்டுக் கொண்டனர். மன்னா என்றால் எபிரேய மொழியில் ‘இது என்ன ?’ என்பது பொருள். மன்னா என்பதே தன் பெயராயிற்று. மக்கள் அதை எடுத்துக் கொண்டு மோசேயிடம் ஓடினார்கள்.

‘ஐயா… எங்கள் கூடாரங்களின் வெளியே இதோ இந்தப் பொருள் நிறைந்து கிடக்கிறது. இது என்ன? ‘ என்று கேட்டனர்.

அதற்கு மோசே,’ இது தான் உங்களுக்கு வழங்கப் பட்டிருக்கும் உணவு. இது மிகவும் சுவையானது. இந்த அப்பங்களை சுட்டு உண்டு பசியாறுங்கள். இதுவே கடவுள் உங்களுக்குத் தந்த உணவு.’ என்றார்.

‘அப்படியா ! அப்படியானால் இப்போதே போய் எல்லாவற்றையும் சேகரித்துக் கூடாரங்களுக்குள் வந்து கொட்டி வைக்கிறோம்’

‘வேண்டாம். கடவுள் இந்த உணவு உங்களுக்கு எப்போதும் தருவதாகச் சொல்லியிருக்கிறார். எனவே உங்கள் ஒரு நாள் தேவைக்குரியவற்றை மட்டும் எடுங்கள். கூடுதலாக எடுக்க வேண்டாம். வாரத்தின் ஆறாவது நாள் மட்டும் இரண்டு நாட்களுக்குரியதை சேகரியுங்கள். ஏனென்றால் ஏழாவது நாள் நமது கடவுளின் ஓய்வு நாள். அன்று நீங்கள் வேலை செய்யக் கூடாது ‘ என்றார் மோசே.

மக்கள் மகிழ்ந்து போனார்கள். அவர்கள் மன்னாவை சேகரித்து உண்டு மகிழ்ந்தனர். அது மிகவும் சுவையான எண்ணைப் பணியாரம் போல இருந்தது. ‘ஒருவேளை நாளை கிடைக்காமல் போனால் என்ன செய்வது ? ‘ சில சந்தேகப் புத்தி கொண்டவர்கள் பேசிக் கொண்டார்கள்.
‘நாம் போய் இன்னும் கொஞ்சம் சேகரித்து வைப்போம். மோசேக்குத் தெரியவேண்டாம்’ என்று சொல்லிக் கொண்டே அவர்கள் அதிகமாகச் சேகரித்து கூடாரத்துக்குள் பதுக்கி வைத்தார்கள். மறு நாள் காலையில் அவர்கள் பார்த்தபோது, அடுத்த நாளுக்காகச் அவர்கள் சேமித்து வைத்திருந்த மன்னா அழுகிப் போய் புழுக்கள் நிறைந்து கெட்ட வாசம் வீசிக்கொண்டிருந்தது.

மோசே அவர்களிடம்’ ஏன் கடவுளின் கட்டளையை மீறுவதிலேயே குறியாய் இருக்கிறீர்கள் ? ஒரு நாள் உணவைத்தானே சேகரிக்கச் சொன்னேன் ? நீங்கள் ஏன் நம்பிக்கையில்லாமல் அதிகமாய் சேகரித்தீர்கள் ? ‘ என்று கோபித்தார்.

அவர்கள் அவரிடம்,’ அது தவறுதான். ஆனால் இதன் மூலம் ஒரு உண்மை எங்களுக்கு விளங்கியிருக்கிறது. ஒரு நாள் சேகரிப்பது மறு நாளுக்குப் பயன்படாது ! நீரோ ஏழாவது நாளுக்கான உணவை ஆறாவது நாளே சேமிக்கச் சொல்லியிருக்கிறீர். அப்போது மட்டும் இது அழுகாதா ? அப்படியானால் ஏழாவது நாள் பட்டினி தானா ? .’ என்றனர்.

‘மீண்டும் மீண்டும் நீங்கள் உங்கள் அறிவால் கேள்விகள் உருவாக்கி குழம்பிப் போகிறீர்கள். கடவுளை நம்புங்கள்’ என்றார் மோசே.

ஆறாவது நாள் மக்கள் இரண்டு நாட்களுக்குத் தேவையான உணவைச் சேகரித்தார்கள். என்ன ஆச்சரியம் ! மறுநாள் எந்த உணவும் கெட்டுப் போகவில்லை.
மக்கள் கடவுளின் அருளை எண்ணி வியந்தனர். ஆனால் அப்போதும் சில மனிதர்களுக்குள்ளிருந்த சந்தேகப் பேய் அகலவில்லை.

அவர்கள் ‘சரி…. ஏழாவது நாள் வெளியே போனால் என்ன நடக்கும் ? ஏன் மோசே ஏழாவது நாள் வெளியே போய் மன்னாவைச் சேகரிக்காதீர்கள் என்றார் ? ‘ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டே சிலர் ஏழாவது நாள் மன்னாவைச் சேகரிக்கச் சென்றனர். என்ன ஆச்சரியம், நேற்றுவரை எங்கும் நிறைந்து கிடந்த மன்னா இன்று எங்குமே காணோம். வெற்றுத் தரை மட்டுமே அவர்களுக்கு முன்னால் இருந்தது !

‘உங்களையெல்லாம் திருத்தவே முடியாது. கடவுளின் கோபத்துக்கு ஆளாகாதீர்கள்.’ என்று மோசே மீண்டும் எச்சரித்தார்.

அவர்களுடைய பயணம் தொடர்ந்தது. தினமும் காலையில் அவர்களுக்கான மன்னா கிடைத்துக் கொண்டே இருந்தது. ஒருநாள் கூட யாரும் பசியால் வாடவில்லை. ஆனால் வெறும் மன்னாவைத் தின்று தின்று மக்கள் சலித்து விட்டனர். இறைச்சியும் இருந்தால் நன்றாக இருக்குமே என மக்கள் நினைத்து மோசேயிடம் வந்தனர்.

‘மோசே…. நாங்கள் எகிப்தில் இருந்தபோது அடிமைகளாய் தான் இருந்தோம், ஆனாலும் எங்களுக்கு விருப்பமான உணவு கிடைத்து வந்தது. இப்போது இந்த வெறும் அப்பங்களை மட்டும் நாங்கள் எத்தனை காலம் தான் தின்பது ? எங்களுக்கு இறைச்சி வேண்டும்’ என்றனர் மக்கள்.

‘நீங்கள்… அழிந்து போகும் உணவுக்காகத் தான் ஆர்ப்பாட்டம் பண்ணுகிறீர்கள். வெறும் உணவுக்காக அடிமை வாழ்வு தான் மேல் என்று சொல்கிறீர்களே… உங்களுக்கே வெட்கமாக இல்லையா ? சரி. பொறுத்துக் கொள்கிறேன். நான் கடவுளிடம் பேசி உங்களுக்கு இறைச்சிக்கு ஏற்பாடு செய்கிறேன்’ மோசே கூறினார்.

மோசே கடவுளிடம் பேசினார். கடவுள் சொன்னார்.’ மோசே… கவலைப்படாதே., நாளை அவர்களுக்கு இறைச்சி கிடைக்கும்’.

மறுநாள் காலையில் மக்கள் தங்கள் கூடாரங்களை விட்டு வெளியே வந்தபோது தரையெங்கும் காடைகள் நிறைந்து கிடந்தன. மக்கள் தேவையானமட்டும் காடைகளைப் பொறுக்கி அவற்றின் இறைச்சியை உண்டு மகிழ்ந்தார்கள்.

பயணம் தொடர்ந்தது. பாலைவனப் பயணம், நாட்கள் செல்லச் செல்ல மக்களிடம் இருந்த தண்ணீரும் தீர்ந்து விட்டது. தண்ணீர் இருக்குமா என மக்கள் தேடி அலைந்தனர். எங்கும் தண்ணீர் இல்லை. கடைசியில் ஒரு பாலைவனச் சோலையைக் கண்டு மக்கள் ஆனந்தித்தார்கள். வேகமாக அதை நோக்கி ஓடினார்கள். அங்கே ஒரு பெரிய ஊற்று ! தாகம் கொண்ட மக்கள் எல்லாம் தண்ணீரை அவசர அவசரமாகக் குடித்தனர் !குடித்த வேகத்திலேயே அதை வெளியே துப்பினர். அது அத்தனை கசப்பு !

மோசேயிடம் மீண்டும் வந்தது முணுமுணுப்பு…’ எங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கூட இல்லை. இருக்கும் தண்ணீரை வாயில் வைக்கவே முடியவில்லை அத்தனைக் கசப்பு !’.

மோசே அருகிலிருந்து ஒரு மரக் கட்டையை எடுத்து அந்த ஊற்றில் போட்டார். உடனே ஊற்று தன்னுடைய கசப்பை எல்லாம் களைந்து நல்ல சுவையானதாக மாறியது. மக்கள் தாகம் தீர தண்ணீரைக் குடித்து விட்டு, தங்கள் தோல்பைகளிலும் நிரப்பிக் கொண்டனர்.

பயணம் கானான் நாட்டை நோக்கி தொடர்ந்து நடந்தது. நாட்கள், வாரங்கள், மாதங்கள் என பயணம் நீண்டது.

மக்களுக்கு மீண்டும் தண்ணீர் தட்டுப் பாடு வந்தது. அது ஒரேபு பாறை நிலப் பகுதி. அங்கே தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகளே காணப்படவில்லை. மீண்டும் மோசே கடவுளிடம் வேண்டினார். கடவுள் மோசேயிடம் பேசினார்.

‘நீ போய் ஒரேபு பாறையின் முன்னால் போய் நில். உன் கையிலிருக்கும் கோலால் அந்தப் பாறையை அடி. அதிலிருந்து தண்ணீர் வரும். அதைக் குடித்து மக்கள் தாகம் தணிக்கட்டும்’

மோசே அவ்வாறே செய்தார். பாறை மீது தன்னிடமிருந்த கோலால் அடித்தவுடன் தண்ணீர் பீறிட்டுக் கிளம்பியது. மக்கள் போதிய மட்டும் தண்ணீர் குடித்து தாகம் தீர்த்துக் கொண்டனர்.

இவ்வாறு மக்களின் தேவைகளையெல்லாம் மோசே தனியொருவராக கடவுளின் துணையோடு தீர்த்து வந்தார். அதனால் எப்போதும் அவருடைய கூடாரத்தைச் சுற்றி மிகப் பெரிய கூட்டம் வேண்டுதல்களோடு காத்துக் கிடந்தது. மோசேக்கு இளைப்பாற நேரமே கிடைக்கவில்லை. இதைக் கண்ட மோசேயின் மாமனார் மோசேயிடம்,

‘நீர் இப்படி தனியொருவனாய் மக்களைச் சமாளிக்க முடியாது. எனவே மக்களை குழுக்கள் குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் இறை பக்தியும், திறமையும் வாய்ந்த ஒவ்வொரு பெரியவரை தலைவராக அமர்த்தும்.’ என்றார். மோசேவிற்கும் அது சரியெனப் பட்டது. அப்படியே மக்கள் பிரிக்கப் பட்டனர். குழுக்கள் எல்லாம் சமமாக இல்லாமல், சில குழுக்களில் ஆயிரம் பேர், சில குழுக்களில் நூறுபேர் , சில குழுக்களில் ஐம்பது பேர் என பல அளவுகளில் இருந்தது. அந்தந்த குழுக்களை அந்தந்த தலைவர்கள் கவனித்துக் கொண்டார்கள் தலைவர்களால் தீர்த்து வைக்க முடியாத பெரிய பிரச்சனைகள் மட்டும் இப்போது மோசேயிடம் வந்தன.

அவர்களின் பயணம் சீனாய் மலையடிவாரத்தை வந்தடைந்தது.

மக்கள் மோசேயிடம் வந்து,’ கடவுள் உங்களோடு பேசுகிறார் … பேசுகிறார் என்கிறீரே… அந்தக் கடவுளை எங்களுக்குக் காட்டும். நாங்களும் கடவுளைக் காண வேண்டும் ‘ என்றனர்.

மோசே அவர்களிடம்,’ நான் கடவுளிடம் இது பற்றிப் பேசுகிறேன்’ என்றார்.

அன்றே கடவுள் மோசேயிடம், ‘நான் இன்றிலிருந்து மூன்றாவது நாள் இந்த மலையில் என்னுடைய மக்களுக்குக் காட்சி தருகிறேன். யாரும் மலையில் கால்வைக்கக் கூடாது. அப்படிக் கால் வைப்பவன் அழிக்கப் படுவான். எல்லோரும் மலையடிவாரத்தில் நின்று என்னை தரிசிக்கவேண்டும். உங்கள் கால் நடைகள் கூட இந்த மலையில் நடமாடக் கூடாது’ என்றார்.

விஷயம் கேள்விப் பட்ட மக்கள் மகிழ்ந்தனர். மூன்று நாட்களும் மிகவும் சுத்தமாகக் குளித்து, நல்ல ஆடைகளை அணிந்து எந்த விதமான இச்சைகளிலும் ஈடுபடாமல் கடவுளுக்காகக் காத்திருந்தனர்.

சரியாக மூன்றாவது நாள். வானத்தில் பேரிடி ஒன்று கேட்டது. கடவுள் நெருப்பு வடிவில் சீனாய் மலையில் வந்திறங்கியதை மக்கள் கண்டார்கள். மலை முழுதும் புகையத் துவங்கியது. மோசே கடவுளுடன் பேசினார். கடவுள் இடிமுழங்குவது போல மோசே க்குப் பதில் கொடுத்தார். மக்கள் நடுநடுங்கினர். மோசேயிடம் அவர்கள் ஓடிப் போய், ‘ஐயோ… கடவுளைக் கண்டது போதும். எங்களுக்குப் பயமாக இருக்கிறது. இனிமேல் நீர் மட்டுமே கடவுளுடன் பேசும்’ என்றனர்.

பின் கடவுள் மோசேயை மலையுச்சிக்கு அழைத்தார். ‘உலகுக்கெல்லாம் பொதுவான என்னுடைய கட்டளைகளை நான் தருவேன்.. மேலே வா’
மோசே மலையுச்சிக்குச் சென்றார். மக்கள் அனைவரும் நடுக்கத்தில் இருந்தனர். யாரும் மலையை நெருங்கக் கூட இல்லை.

கடவுள் மோசேயிடம் தம் கைப்பட பாறையில் எழுதிய பத்துக் கட்டளைகளை இரண்டு கல்வெட்டுகளாகப் பெயர்த்துக் கொடுத்தார். அதற்காக மோசே நீண்ட நாட்கள் மலையுச்சியிலேயே கடவுளுடன் தங்க வேண்டியதாயிற்று. மோசே மலையில் ஏறி நீண்ட நாட்கள் ஆனதால், மலையடிவாரத்தில் இருந்த மக்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழக்க ஆரம்பித்தனர்.

‘மலைக்குச் சென்றால் உடனே திரும்புபவராயிற்றே மோசே… இப்போது ஏன் இவ்வளவு தாமதம் ? மோசேயை நெருப்பு அழித்திருக்கக் கூடும்’

‘அவர் இனிமேல் திரும்பி வருவார் என்னும் நம்பிக்கை இல்லை. உண்ணாமல் ஒரு மனிதன் இத்தனை காலம் மலைமீது உயிரோடு இருக்கக் முடியுமா என்ன ‘

‘இனிமேல் என்ன செய்வது. ? யார் நம்மை வழி நடத்துவது ?’ என்றெல்லாம் மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தன. மக்களின் நடவடிக்கைகளும் மாறத் துவங்கின. அவர்கள் சிற்றின்பத்திலும், விரோதம், பகை , கோபம், சண்டை என கடவுளுக்குப் பிடிக்காத அனைத்து செயல்களையும் செய்யத் துவங்கினர். தங்களிடமிருந்த தங்கநகைகளையெல்லாம் ஓரிடத்தில் போட்டு உருக்கி ஒரு கன்றுக் குட்டியின் உருவத்தைச் செய்து ‘ இதுவே இனிமேல் நம் கடவுள். இதை நாம் வணங்குவோம்’ என்றார்கள். அந்த உருவத்திற்கு பலி செலுத்தவும், பூஜை செய்யவும் ஆரம்ப்பித்தனர்.

கடவுள் நாற்பது நாட்களாய் தன்னோடு மலையுச்சியில் இருந்த மோசேயிடம்,’ நீ கீழே போ. இந்த பத்துக் கட்டளைகள் அடங்கிய கல்லையும் உன்னுடன் எடுத்துச் செல். கீழேயிருக்கின்ற மக்கள் நீ வரமாட்டாய் என நினைத்துத் தவறான பாதையில் போகிறார்கள்’ என்றார்.

மோசே மலையுச்சியிலிருந்து கிளம்பி மலையடிவாரத்தை அடையும் போதே எங்கும் கேளிக்கைச் சத்தங்கள், நடனங்கள் என கூட்டம் அமர்களப் பட்டுக் கொண்டிருந்தது. அதைக் கண்ட மோசேயின் கோபம் கட்டுக் கடங்காமல் போயிற்று.

‘நானூறு ஆண்டைய அடிமைத்தனம் உங்களுடையது. அதை விட்டு வெளியேற்றிய ஆண்டவருக்கு எதிராகவே நடக்கிறீர்களே… பாவிகளே’ என்று உரத்த குரலில் கத்திக் கொண்டே கடவுள் கொடுத்த கட்டளைகள் இருந்த கல்லையும் ஆவேசத்தில் தூக்கி எறிந்தார். அது உடைந்து சிதறியது.

‘உங்களுக்கு வாழும் கடவுள் போதாதா ? தங்கக் கன்றுக் குட்டி என்ன தந்தது ? ‘ என்று கேட்டுக் கொண்டே அவர்களுடைய கன்றையும் பலி பீடங்களையும் தகர்த்தெறிந்தார். மோசேயைப் போலவே கடவுளின் கோபமும் அந்த மக்கள் மேல் இருந்தது. கடவுள் மோசேயை அழைத்து,
‘இனிமேல் நான் இந்த மக்களைக் கைவிடப் போகிறேன். என்னை நம்பாமல் தங்களை நம்பும் இவர்களை நான் கொன்று அழிப்பேன்’ என்றார்.

மோசே கடவுளிடம்’ கடவுளே… இதற்காகவா எனக்கு இத்தனை பணிகள் தந்து என்னை இந்த மக்களிடம் அனுப்பி வைத்தீர். இதைக் கேள்விப் பட்டால் எகிப்தியர்கள் எல்லோரும் இஸ்ரயேலர்களின் கடவுள் இஸ்ரயேலர்களைப் பாலை நிலத்துக்கு வஞ்சகமாய்க் கூட்டிப் போய் கொன்றுவிட்டார் என்று சொல்ல மாட்டார்களா ?  வேண்டாம் கடவுளே.. இந்த முறை அவர்களை மன்னியும்’ என்று மன்றாடினார்.

கடவுள் சம்மதித்தார். மோசே கீழே போய் குழுக்களின் தலைவர்கள் எல்லோரையும் அழைத்து, ‘தீயவர்கள் என்று தோன்றுவோரை எல்லாம் கொன்றுவிடுங்கள். மிஞ்சியிருப்போர் கடவுளின் கட்டளைகளைக் கேட்போராக இருக்கட்டும்’ என்று சொன்னார். அதன்படி சுமார் மூவாயிரம் பேர் கொன்று குவிக்கப் பட்டனர்.

கடவுள் மோசேயிடம் பத்துக் கட்டளையின் இரண்டாவது பிரதி ஒன்றைக் கொடுத்தார். ஆனாலும் கடவுள் மோசேக்கு தன்னுடைய முகத்தைக் காட்ட வில்லை. நெருப்பு, ஒலி போன்றவை மூலமாக மட்டுமே அவருடன் பேசி வந்தார். மோசேக்கு கடவுளின் முகத்தைக் காண வேண்டும் என்னும&#